அரசியல் கைதிகளின் பெற்றோர் இரங்கல் செய்தி…

அரசியல் கைதிகளின் பெற்றோர் இரங்கல் செய்தி…

சட்டத்தரணி திருமதி கௌரிசங்கரி தவராசா அவர்களின் திடீர் மரணச் செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

அவசரகாலச்சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்றவற்றின் கீழ் கடந்த காலங்களில் வகைதொகையின்றி கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்படுகின்ற தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்காக மிக நீண்ட காலமாக செயற்ப்பட்டு வந்திருந்த சட்டத்தரணி திருமதி கௌரிசங்கரி தவராசா அவர்களின் திடீர் மரணச் செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளோம்.

இவர் ஆரம்ப காலங்களில் தமிழ் அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை போன்ற முக்கியமானவர்களின் வழக்கு விவகாரங்களில், ஆட்சியாளர்களினால் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல்களையும் மீறி துணிவோடு நீதிமன்றப் படி ஏறி வழக்காடிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.ரி.தவராசாவுக்கு எப்போதும் பக்க பலமாக நின்று சட்ட ஆலோசனைகள் உட்பட பல்வேறு வழிவகைகளிலும் உதவி வந்திருக்கிறார். உயர் நீதிமன்றில் அரசியலமைப்பு தொடர்பான மிக முக்கிய வழக்குகளை முன்னின்று நெறிப்படுத்தியதன் ஊடாக தனது சட்டப்புலமையையும் வாதத்திறமையையும் பறைசாற்றி வந்திருந்தார்.

பிரதானமாக குடிமக்களின் அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கு விடயங்களில் மிகுந்த கரிசனை கொண்டிருந்தார். மனித கடத்தல்கள், திட்டமிடப்பட்ட அரசியல் படுகொலைகள் போன்ற வழக்குகளுக்காக உயர் நீதிமன்றில் சட்டத்தரணிகள் குழுவோடு நின்று, அவற்றை நெறிப்படுத்தியதன் மூலம் உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச ரீதியில் பேசப்பட்ட பிரபல சட்டத்தரணி ஆவார். இவர் பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் சட்ட ஆலோசகராக பல பணிகளை ஆற்றியுள்ளதுடன், நாட்டில் சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தின் உயிர்ப்யையும் தக்கவைப்பதில் தனது சட்டத்துறை மூலம் முக்கிய வகிபாகத்தை செய்து வந்திருக்கிறார்.

மேலும் குடியியல் வழக்குகள், பெண்களுக்கு எதிரான அத்துமீறல் செயற்பாடுகள் தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையாகி நியாயத்தை பெற்றுக்கொடுப்பதற்கு ஒருபோது பின்னின்றதில்லை. இவரின் திடீர் இழப்பு எமக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம் என்றுள்ளது.   

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *