இலங்கையை தண்டிக்க மனித உரிமைகள் ஆணைகுழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை

இலங்கையை தண்டிக்க மனித உரிமைகள் ஆணைகுழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு அரசாங்கத்தின் எதிர்ப்பை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை நேற்று சந்தித்து ஆசிபெற்றதன் பின்னர், ஊடகங்கங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் ஏதாவது இடம்பெற்றால் நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய மாத்திரமே அது குறித்து செயற்பட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரை, கொரோனா பரவல் காரணமாக இணையவழி காணொளி முறையில் முன்னெடுப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கண்டியில் வெளிவிவகார அமைச்சின் கண்டி உதவி தூதரகத்தையும் நேற்று அமைச்சர் திறந்து வைத்தார். இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், அவை நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக விளக்கி, அவர்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த அறிக்கை இலங்கைக்கு மட்டுமல்ல, மேலும் 10 நாடுகளுக்கும் தண்டனை வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைகுழு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அத்தகைய முறையில் செயல்பட ஆணைகுழுவிற்கு அதிகாரம் இல்லை எனவும் இது, “ஐ.நா பொதுச் சபை மூலமே செயற்படுத்தப்பட வேண்டியதொன்றாகவும் அவர் வலியுறுத்தினார் .

மேலும் இதனை எதிர்கொள்ள இலங்கை தயாராக இருப்பதாகவும், அதனுடன் இணைந்த நாடுகளுடன் தற்பொழுது கலந்துரையாடி வருவதாகவும் அவர் கூறினார்.

பயங்கரவாத கட்டுப்பாட்டுக்குள் இருந்த மூன்று இலட்சம் அப்பாவி பொதுமக்களை விடுவித்த பின்னர், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் மேலும் எல்.ரீ.ரீ.ஈ இராணுவத்தினருக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு , அவர்கள் இப்போது சொந்த கிராமப்புறங்களில் நன்றாக வாழ்ந்து வருகின்றனர் எனவும் தெரிவித்த அமைச்சர் , இலங்கை அரசாங்கம் எந்தவொரு இனத்தினரையும் பழிவாங்கவில்லையெனவும் பயங்கரவாதத்தை தோற்கடித்த பின்னர் அவர்களின் அபிலாசைகள் வடக்கு மக்களால் தோற்கடிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்ற வகையில், நாட்டிற்குள் நடக்கும் எதையும் தொடர்பாக நாட்டின் அரசியலமைப்பின் படி செயல்பட அதிகாரம் உள்ளது. முந்தைய அரசாங்கம் வெளிநாட்டு நீதிபதிகளை அழைத்து வந்து ஆவணங்களில் கையெழுத்திட ஒப்புக்கொண்ட போதிலும், இது முற்றிலும் அரசியலமைப்பிற்கு முரணான செயல். இந்த விவகாரம் தொடர்பாக உள் விசாரணை நடத்த உச்சநீதிமன்ற நீதிபதியால் ஒரு ஆணைகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *