டெல்லி குண்டுவெடிப்பு; சந்தேகம் கிளப்பும் இஸ்ரேல்..!

டெல்லி குண்டுவெடிப்பு; சந்தேகம் கிளப்பும் இஸ்ரேல்..!

டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே நேற்று (29.01.2021) மாலை குறைந்த சக்திகொண்ட குண்டு வெடித்தது. இதில் சில கார்கள் சேதமடைந்தன. நாட்டின் தலைநகரில் குண்டு வெடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதர் ரான் மல்கா, டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு இஸ்ரேலிய தூதரகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளதாக கருதுவதாகவும், 2012 ஆம் ஆண்டு இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், இதற்கும் தொடர்பிருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “நேற்று இந்தப் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டபோது, இஸ்ரேல் மற்றும் இந்தியா இராஜதந்திர உறவுகள் முழுமையாக நிறுவப்பட்ட 29வது ஆண்டு விழாவைக் கொண்டாடினோம். எனவே, இது ஒரு தற்செயல் நிகழ்வாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திலிருந்து அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்திய – இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு இடையே முழு ஒத்துழைப்பு உள்ளது. இந்தக் குண்டுவெடிப்பு இஸ்ரேலிய தூதரகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்பதே எங்களின் தற்போதைய வலுவான அனுமானம்” எனக் கூறியுள்ளார். தொடர்ந்து “டெல்லியில் 2012 ஆம் ஆண்டு இஸ்ரேலிய தூதர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அந்த இடம் தூதரகத்திற்கு வெகு தொலைவில் இல்லை. இந்தக் குண்டுவெடிப்பு அதனுடைய தொடர்பாக இருக்கலாம். நாங்கள் விசாரிக்கும் கோணங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவில் இருக்கும் இஸ்ரேலிய பிரதிநிதிகளைப் பாதுகாக்க தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பார்கள் என்றும், குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்களைக் கண்டுபிடிப்பார்கள் என்றும் இந்திய ஆணையங்கள் மீது எங்களுக்கு முழுநம்பிக்கை உள்ளது” என ரான் மல்கா தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *