பொட்டம்மான் வருவாரா?  (பாகம் 4)

பொட்டம்மான் வருவாரா? (பாகம் 4)

“வரலாறு என்பது ஒரு ஆசான் மாதிரி. கற்றும் கொள்கிறது. கற்றும் தருகிறது”

பொட்டம்மான்’ வருவாரா?

பொட்டம்மான் வருவாரா? என்ற எனது கேள்வி பலருக்கும் அவர் வரவேண்டும், மீண்டும் இயக்கத்தை கட்டி வளர்க்க வேண்டும் என்ற எண்ணங்களையும் ஏற்படுத்தி இருக்கலாம். அவர் மீண்டும் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கும் பல்லாயிரக் கணக்கானோரில் நானும் ஒருவன்! இந்த நேரத்தில் அவர் வந்துவிடக் கூடாது.இறந்தவராகவே இருக்கட்டும் என்று சிந்திப்பவர்களும் புலம்பெயர் தேசங்களில் இருக்கலாம். ஏனெனில் இயக்கத்தின் சொத்துக்கள் இன்னார் இன்னாரிடம் இருக்கின்றன என்ற விபரங்கள் அடங்கிய பெயர்ப் பட்டியலும் வெளிவருகின்றது. நிச்சியமாக இயக்கத்தின் சொத்துக்கள் பலரிடம் இருக்க வேண்டும்.அவர்கள் சொல்லக்கூடிய வார்த்தை, “அம்மான் வந்தால் கொடுப்பம்”.அவர் வந்து கணக்கு கேட்டால் நாங்கள் என்ன செய்வது என்றொரு புருடா, கதையை அவிழ்ப்பார்கள்.

எதிர்காலத்தில் ஏதாவது தேவைகளுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் தேசியத் தலைவர் அவர்களும், சில பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்றெண்ணி பெருந்தொகைப் பணத்தையும், சொத்துக் களையும் ஒப்படைத்திருக்க வேண்டும். அந்தச் சொத்துக்களை இவ்வளவுகாலமும் நீங்கள் வைத்து ஆண்டது போதும், அனுபவித்தது போதும்! தமிழீழ மண்ணில் மாவீரர் குடும்பங்களும்,சிறை மீண்டு வந்த போராளிகளும் அவர்கள் குடும்பங்களும் இவ்வளவு காலமும் அவல வாழ்வையேவாழ்ந்து கொண்டிருந்தார்கள்.கூலி வேலை செய்தாவது காலம் கழித்து வந்தார்கள்.
சொல்லாமல் கொள்ளாமல் வந்த இந்த கொடிய கொரோனா அவர்களின் வாழ்க்கையையே சிதைத்துச் சின்னா பின்னமாக்கிவிட்டது. ஒரு நேரக் கஞ்சிக்கே அல்லல்படும் நிலையில் அவர்கள் அன்றாடம் செத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நேரத்திலாவது உங்கள் இதயக்கதவுகள் திறக்கட்டும். நாளாந்தம் செத்துக் கொண்டிருக்கும் அவர்களை நோக்கி உங்கள் கரங்கள் நீளட்டும். இந்த நேரத்திலாவது நீங்கள் உதவிகள் செய்யாவிடின் இனி எப்போ செய்யப் போகின்றீர்கள்? அள்ளிக் கொடுக்க வேண்டாம். கிள்ளியாவது போடுங்கள்! இதுதான் நீங்கள் தேசியத்தலைவருக்கும் பொட்டு அம்மானுக்கும் காட்டும் விசுவாசமாக இருக்கும். நன்றிக்கடனாக இருக்கும்.

தமிழீழ விடுதலை இயக்கத்தைப் பொறுத்தவரையில் ‘அண்ணை’ என்ற வார்த்தை தேசியத் தலைவர் அவர்களையே குறிக்கும். அனைத்துப் போராளிகளும் அவரைப் பாசத்தோடு ‘அண்ணை ‘ என்றுதான் அழைப்பார்கள். ஆரம்ப காலங்களில் அவரோடு வாழ்ந்தவர்கள் ‘தம்பி’ என்று அழைப்பார்கள். இயக்கங்கள் ஆரம்பமாவதற்கு முன் பெரிய சோதி, சின்ன சோதி, தங்கத்துரை, குட்டிமணி ஆகியோர்களுடன் இவர் சேர்ந்து வாழ்ந்து இயங்கிய காலங்களில் வயதில் குறைந்தவராக இவர் இருந்தமையால் அனைவரும் இவரைத் ‘தம்பி’ என்றே அழைத்தார்கள். பின்பு அந்தப் பெயர் நிலைத்துவிட்டது.

‘கரிகாலன்’ என்றும் இவருக்கு இன்னொரு பெயர் உண்டு.அது காரணப் பெயர். வல்வை ஊரிக்காடு நெற்கொழு வைரவர் கோவில் பகுதியில் இவர்கள் வெடிகுண்டு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளை தற்செயலாக அது வெடித்து தலைவரின் காலில் தீக்காயம் ஏற்பட்டுவிட்டது. அந்தக் காயத்தின் தழும்பு அவரது குதிக்காலில் இருந்தமையால் கரிகாலன் என்றும் அழைக்கப்பட்டார்.சோழ மன்னனின் பெயராக இருந்ததும் இப்பெயர் நிலைத்ததற்கு காரணமாக இருக்கலாம். சோழ மன்னன் புலிக்கொடி பறக்க இலங்கையை ஆட்சி புரிந்திருக்கின்றார். அதை நினைவுகூர்ந்தே எமது இயக்கத்தின் புலிக்கொடியையும் தலைவர் அவர்கள் வடிவமைத்தார்.

பின்நாட்களில் பாலா அண்ணர் தலைவரை சோழர் என்றும் அழைப்பது வழமை. மணி என்றொரு பெயரும் தலைவருக்கு உண்டு. கிட்டு போன்றவர்கள் தலைவர் தொலைவில் வருகின்றார் என்றால் “டேய் முழியன் வாறான்டா” என்று கூறி மற்றவர்களை உசார்ப்படுத்துவதும் உண்டு. காந்தக் கண்கள் தலைவருடையது. அவருடைய அந்தக் கண்களை வைத்தே அவர் என்ன மனநிலையில் இருக்கின் றார் என்பதை அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் சொல்லிவிடுவார்கள். வாகனங்களில் அவர் செல்லும்போதுகூட ஆசனத்தின் நடுவில் துப்பாக்கியோடு தயார் நிலையில் இருக்கும்போதும் அவரது கண்கள் இரண்டும் முன்புறமும் இரு பக்கங்களிலுமாக அவதானித்துக் கொண்டே இருக்கும். இயக்கத்தின் மூத்த போராளிகளை மற்றையவர்கள் அவர்களின் பெயர்களோடு சேர்த்துப் பால்ராஜ் அண்ணை, பாலா அண்ணை, யோகி அண்ணை, நடேசன் அண்ணை என்று அழைப்பார்கள். குமரப்பா, ரஞ்சித் அப்பா, ரகுவப்பா என அப்பாவையும் சேர்த்து சிலர் அழைக்கப்பட்டதுண்டு. மாதவன் மாஸ்டர், தினேஷ் மாஸ்டர், மனோ மாஸ்டர், இந்திரன் மாஸ்டர், விவேகன் மாஸ்டர், அன்ரன் மாஸ்டர் என சிலர் அழைக்கப்பட்டார்கள். செல்லக்கிளி அம்மான், பொன்னம்மான், புலேந்தி அம்மான், கபிலம்மான் வரிசையில் பொட்டு அம்மானும் வந்து சேர்கின்றார்.

77 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் திரு.வெற்றிவேலு யோகேஸ்வரன் அவர்கள் வெற்றிபெற்றபோது அவரது நெற்றியில் தனது விரலை பிளேட்டினால் கீறி இரத்தப் பொட்டு வைத்து தனது உணர்ச்சியை வெளிக்காட்டியுள்ளார் பொட்டு அம்மான். பின்பு இவர் இயக்கத்தில் இணைந்த போது இவ்விடயம் தெரியவர இவர் பொட்டு என்று அழைக்கப்பட்டார். காலக்கிரமத்தில் அது பொட்டு அம்மானாக நிலைத்துவிட்டது. இன்று சர்வதேச காவல் துறையினரால் (Interpol, International Criminal Police Organization) தேடப்படும் அளவிற்கு முக்கிய நபராக பொட்டு அம்மான் விளங்குகின்றார்.

தமிழகத்திலிருந்து தேவர் அண்ணா.

தொடரும்………

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *