மனித உரிமைகள் பேரவையில் குறிப்பிடத்தக்க சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் -திஸ்ஸ அத்தநாயக்க

மனித உரிமைகள் பேரவையில் குறிப்பிடத்தக்க சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் -திஸ்ஸ அத்தநாயக்க

ஸ்ரீலங்கா மனித உரிமைகள் பேரவையில் குறிப்பிடத்தக்க சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலிருந்து தெளிவாகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் குறித்த அறிக்கையை ஆழமாக ஆராய்ந்து, உரியவாறான பிரதிபலிப்பை எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

தொடர்நச்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை நோக்குகையில், எதிர்வரவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் ஸ்ரீலங்கா குறித்த மட்டத்திலான சவாலை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்றே தோன்றுகின்றது.

ஆணையாளரின் அறிக்கையில் போரில் சம்பந்தப்பட்ட இருதரப்புக்கள் தொடர்பிலும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக போர் முடிவடைந்து சுமார் 11 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னமும் முறையான பொறிமுறை ஒன்றினூடாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படாமை தொடர்பில் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்தும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் காணப்படும் குறைபாடுகளைத் திருத்தியமைக்குமாறே நாமும் வலியுறுத்தினோம். எனினும் அரசாங்கம் அதனை முழுமையாக இல்லாதொழித்து 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றியது.

எனவே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை விரிவாகவும் ஆழமாகவும் ஆராயவேண்டியது அவசியமாகும். அதுமாத்திரமன்றி அதனை முழுமையாக ஆராய்ந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரின் போது அதற்கு முறையான பிரதிபலிப்பையும் வெளிக்காட்ட வேண்டிய தேவையிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் ஸ்ரீலங்கா தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் அனைத்து விடயங்களையும் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் அனைத்தையும் புறக்கணித்து விடவும் முடியாது.

சர்வதேசத்தின் மத்தியில் ஏனைய நாடுகளின் உதவியின்றி எம்மால் தனித்துப் பயணிக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எமது நாட்டின் மீது சர்வதேசத்தினால் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம். எனினும் நாம் இவையனைத்தையும் நடுநிலையுடன் ஆராய்ந்து, மனித உரிமைகள் பேரவையுடனும் கலந்தாலோசித்து, நேர்மறையான தீர்வொன்றை நோக்கிப் பயணிப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்வதே புத்திசாலித்தனமான செயற்பாடாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *