மூன்று நிலைப்பாட்டில் இருக்கிறார் ஓ.பி.எஸ்.! – கே.சி.பழனிசாமி பேட்டி!

மூன்று நிலைப்பாட்டில் இருக்கிறார் ஓ.பி.எஸ்.! – கே.சி.பழனிசாமி பேட்டி!

சசிகலா விடுதலை, மீண்டும் ஆட்சி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசியது உள்ளிட்டவை குறித்து அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி நக்கீரன் இணையதளத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். 

சசிகலா விடுதலையாகும் நாளில் ஜெ.நினைவகம் திறந்துள்ளார். தேர்தலில் வென்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்குமா? 
 

சசிகலா விடுதலை பெரிதாக வெளியே தெரியக்கூடாது என்பதற்காக ஜனவரி 27ஆம் தேதி ஜெ.நினைவிடத்தை திறந்துள்ளார். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். ஆனால், அவரே அதிமுகவை ஒன்றுபடுத்தத் தவறிவிட்டார். அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வலுப்படுத்தாமல் எப்படி அது சாத்தியமாகும். அதிமுக தொண்டனாக நான் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் நினைக்கிறேன். அதற்கு ஒருங்கிணைந்த அதிமுக வரவேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆனால், ஆட்சி மீண்டும் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. கட்சி தங்களது கட்டுப்பாட்டில் வரவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி ஆகிய மூன்று பேரும் நினைக்கிறார்கள். ஆட்சி இருப்பதால் இவர்களை ஆதரிக்கிறார்கள். ஆட்சி முடிந்தவுடன் இவர்களுடன் ஒருவரும் நிற்கமாட்டார்கள். சிதறடித்துவிடுவார்கள். 

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என அழுத்தமாகச் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் இந்த விஷயத்தில் ஓ.பன்னீர்செல்வம் அமைதியாகவே இருக்கிறாரே? 

ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை மூன்று நிலைப்பாட்டில் உள்ளார். அவரது பெரிய மகன் ஓ.ரவீந்திரநாத் மோடி படம் வைத்துள்ளார். இளைய மகன் ஜெயபிரதீப் சசிகலா படம் வைத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி உடன் உள்ளார். எல்லா இடத்திலேயேயும் துண்டு போட்டு வைத்துள்ளார். எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக இருக்கிறார் அவ்வளவுதான். 

சசிகலா விடுதலையாகிவிட்டார். அதிமுகவில் மாற்றம் வருமா?

நான் சசிகலா பலமானவரா, எடப்பாடி பழனிசாமி பலமானவரா எனப் பார்க்கவில்லை. எல்லோரும் ஒன்றுதான். என்னைப்போல், எம்ஜிஆர் காலத்தில் இருந்து கட்சியில் இருந்தவர்கள் அனைவரும் நினைப்பது ஒன்றுபட்ட அதிமுக தேவை என்பதுதான். ஒரு அதிமுக தொண்டனை கூட இழந்துவிடக் கூடாது என்றுதான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் நினைத்தார்கள். அதிமுகவை ஒன்றுபடுத்த தவறினால் தேர்தலில் கடினமான சூழலைச் சந்திக்க வேண்டிவரும். ஆட்சியில் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி சொல்வதைக் கேட்கிறார்கள். ஆட்சியில் இல்லாதபோது, 4 ஆண்டு கால ஆட்சியில் நடந்தவை பற்றி வழக்குகள் தொடர்கிறபோது, எடப்பாடி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் தனித்துவிடப்படுவார்கள். தேர்தலுக்குப் பிறகு ஒன்றுபட்ட அதிமுக உருவாகும். இவ்வாறு கூறினார். 

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *