தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்பட வேண்டும் என்பதே முஸ்லிம் தலைவர்களின் எதிர்ப்பார்ப்பு -கலையரசன் எம்.பி

தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்பட வேண்டும் என்பதே முஸ்லிம் தலைவர்களின் எதிர்ப்பார்ப்பு -கலையரசன் எம்.பி

தமிழ் மக்களின் காணிகளை கபளீகரம் செய்வதற்காகவே கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடயங்களில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தடை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அம்பாறை – பெரியநீலாவணை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள சதுப்பு நிலத்தை நேரடியாக பார்வையிட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்பட வேண்டும் என்பதே முஸ்லிம் தலைவர்களின் எதிர்ப்பார்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர்,

பெரிய நீலாவணை பிரதேசத்தில் அரச காணிக்குள் அத்துமீறி அதனைக் கையகப்படுத்தும் செயற்பாடுளை சகோதர இனத்தவர்கள் மேற்கொண்டதோடு, அங்கு சலவைத் தொழில் செய்யும் தொழிலாளர்களினால் பயன்படுத்தப்பட்டு வரும் தோணாவும் மண்ணிட்டு நிரப்பப்பட்டு அபகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

பிரதேச மக்களினால் வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து என்னால் அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுத்து அதனைத் தடுத்து நிறுத்த முடிந்தது. அப்பிரதேச மக்களின் விரைவான செயற்பாட்டின் மூலம் இதனைத் தடுக்க முடிந்தது. ஆனால் இது போன்ற பல செயற்பாடுகள் எமது மாவட்டத்தில் இடம்பெறுகின்றன. இவை அனைத்தும் தடுக்கப்பட வேண்டும்.

கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் விடயத்தில் பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் வேளையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றனர். அவ்வாறிருக்கையில் தமிழர் பிரதேசங்களில் இவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்களின் பின்புலங்கள் பலமாக இருப்பதன் காரணமாகவே இவர்களால் இவ்வாறான காரியங்களைச் செய்ய முடிகின்றது. 

எமது நிலங்களை ஆக்கிரமிப்பதோடு மாத்திரமல்லாமல் எமது மக்களின் தொழிலிடங்களையும் வளைத்தப் போடும் இவ்வாறானவர்களின் இத்தகைய செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியவை.

இவ்வாறான செயற்பாடுகள் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தரமுயர்த்தல் விடயத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏன் முட்டுக்கட்டையாக இருக்கின்றார்கள் என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. 

தமிழர் பிரதேச காணிகளை அபகரிப்பதற்காகவே கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயங்களில் முஸ்லிம் அரசியல் வாதிகள் தடையாக உள்ளார்களா? என்கின்ற சந்தேகங்களும் எழுகின்றன. 

இவ்வாறான நில ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். இது தொடருமாயின் கட்டியெழுப்பப்பட வேண்டிய இரு இனங்களின் ஒற்றுமை சீர்குலையும் நிலைமையே உருவாகும் என தவராசா கலையரசன் மேலும் தெரிவித்தார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *