இவர்கள் எந்த ரகம்?….

இவர்கள் எந்த ரகம்?….

“வணக்கம் அக்கா.. எப்படி இருக்கிறீங்கள் உங்களால ஒரு உதவி செய்ய முடியுமோ..? எங்கட ஐந்து பிள்ளைகள் எவரது உதவியும் இல்லாமல் இந்தியாவில ஒரு வீட்டில நிற்குதுகளாம்.., இப்ப கொரானாவும் மோசமாக இருக்கு , சாப்பாட்டுக்கே கஸ்ரப்படுகுதுகளாம் , ஏதாவது செய்ய வேணும் அக்கா”.. எனக்கு நன்கு பழக்கமான ஒரு தம்பியிடம் இருந்து ஒரு அழைப்பு வந்திருந்தது… ‘யார் தம்பி பிள்ளைகள் என்று கேட்டேன்?’..“எனக்கு தெரியாது அக்கா, எப்பிடியோ என்ர இலக்கம் அவையிற்கு கிடைச்சிருக்கு , கதைச்சனான் உண்மையில இயக்கத்தில இருந்த பிள்ளைகள் போலத்தான் இருக்குது..
நீங்கள் தான் ஒருக்கா உறுதிப்படுத்த வேணும்” ‘சரி அப்பன் நம்பரை எனக்கு போட்டு விடுங்கோ நான் கதைச்சு பார்க்கிறன்’ இது நான். தொலைபேசி இலக்கமும் எனக்கு கிடைச்சது .. நானும் தொடர்புகொண்டேன்…. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை கேள்விபட்டதுண்டு .. இப்போது எனக்கு அனுபவமாக என்முன்னால் அந்த பூதம்…..

100% உண்மையான சம்பவம்….

குறித்த இலக்கத்தோடு தொடர்புகொண்டு கதைத்தபோது தங்களை விடுதலைப்புலிகளின் பெண்போராளிகள் என்று அடையாளப்படுத்தி புலம்பெயர்ந்த மக்களிடம் இருந்து பணம்பறிக்கும் ஒரு கும்பல் தொடர்பான முழுமையான விபரங்களை அறிய முடிந்தது…

அன்பான உறவுகளே நீங்களும் இந்த கூட்டத்திடம் ஏமாந்து போயிருக்கலாம் அல்லது ஏமாந்து போகிறவர்களாக இருக்கலாம் , நான் உங்களுக்கு தரும் இந்த விபரங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கலாம்.. முடிவுகளை நீங்களே எடுத்து கொள்ளுங்கள்.

மிகவும் நுட்பமான இந்த மோசடியில் எமது இயக்கத்தின் முக்கியமான போராளிகளது விபரங்களும் தொடர்புகளும் திட்டமிட்டு பயன்படுத்தப்படுகின்றது. தாங்கள் மிகவும் வறுமையில் வாழ்வதாக காட்டுவதற்கு பல தந்திரங்கள் கையாளப்படுகிறது. குறிப்பாக ஆண்களை குறிவைத்து கேட்கப்படும. உதவிகோரிக்கைகள் அவர்களை சலனப்படும் அளவுக்கான கெஞ்சல்களாகவும் கொஞ்சல்களாகவும் மாற்றமடைந்து , உரையாடல்கள் பதிவுசெய்யப்படுகின்றது. பின்னர் குறித்த உரையாடல் பதிவுகள் அவர்கள் வாழும் நாடுகளில் இருக்கும் குறித்த பெண்களின் முகவர்கள் ஊடாக அவரவர்களுக்கு அனுப்பப்பட்டு ஒருவிதமான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி பண வசூலிப்பில் இறங்குகிறார்கள்.
இங்கே தாயக உறவுகளுக்கும் உதவும் பலநல்ல மனிதர்கள்கூட சில பலவீனங்களால் குறித்த பெண்களின் வலையில் விழுந்து குடும்பங்கள் சீரழியும் நிலைக்கு வந்துள்ளார்கள்.

இங்கே மிகவும் கவனிக்க வேண்டிய விடயம் என்ன வென்றால் புலம்பெயர்ந்த தேசங்களில் உள்ள முகவர்களே யாரை தொடர்புகொண்டு எவ்விதம் பேசவேண்டும் என்ற விபரங்களை குறித்த பெண்களுக்கு அனுப்புவதற்கு அப்பால் அவர்களை வைத்து பணம் வசூலிக்கிறார்கள் என்பதே உண்மை. இங்கே ஒருவகை பாலியல் அடிமைகளாக தொலைபேசி , வட்சப் சமூகவலைத்தளங்களின் உதவியோடு போராளிகள் என்ற அறிமுகத்தோடு தொடங்கும் இந்த சதிவலை பலரது வாழ்வை சிதைத்து வருவது வேதனையே.

அன்பான உறவுகளே , நீங்கள் மனிதநேயம் கொண்டு யாருக்காவது உதவிகள் செய்ய நினைத்தால் , முதலில் உதவிபெறுபவர்களின் விபரங்களை உங்களுக்கு நன்கு தெரிந்தவர்களூடாக உறுதிப்படுத்திய பின்னர் வெளிப்படையாக செய்யுங்கள். இங்கே இரகசியமான தொடர்புகளும் , முகம்தெரியாத அறிமுகங்களும் உங்களுக்கு மீளமுடியாத துன்பத்தை ஏற்படுத்திவிடகூடும் என்ற முன்னெச்சரிக்கையோடு செயற்படுங்கள்.

குறித்த சம்பவத்தால் அல்லது இதேபோல் ஏமாற்றப்பட்டிருந்தால் nerudalnews@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புகொள்ளவும் தகவல் தருவோர் விபரம் பாதுகாக்கப்படும்

நன்றி.
ந . நிலவினி

பெண்போராளிகள் சார்பாக

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *