நாங்கள் போர்ட் சயீட் துறைமுகத்தை சென்றடைந்து விட்டோம். ஆனால் வணங்கா மண் கப்பல் வந்து சேரவில்லை -வாசகர்களுக்கான சேரமானின் திறந்த மடல்

நாங்கள் போர்ட் சயீட் துறைமுகத்தை சென்றடைந்து விட்டோம். ஆனால் வணங்கா மண் கப்பல் வந்து சேரவில்லை -வாசகர்களுக்கான சேரமானின் திறந்த மடல்

வாசகர்களுக்கான சேரமானின் திறந்த மடல்

தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் பல மாதங்களுக்கு முன்னர் தனக்கு இருந்தும் ஏன் அண்ணை அப்படிச் செய்யாமல் கடைசி வரை வன்னியில் நின்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்று நான் அடிக்கடி சிந்தித்தது உண்டு.அண்ணை வீரச்சாவைத் தழுவி விட்டார் என்ற செய்தி 17.05.2009 மாலை என்னை வந்தடைந்த பொழுது நான் இலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்து கொண்டிருந்தேன்.எகிப்து போய், அங்கு வணங்கா மண் கப்பலில் ஏறி ஒரு ஊடகவியலாளனாக முள்ளிவாய்க்காலுக்கு வருமாறு 12.05.2009 அன்று மணிவண்ணன் அண்ணை கேட்ட போது, எங்கள் போராட்டம் ஏதோ ஒரு திருப்புமுனையை சந்திக்கப் போகின்றது என்று தான் நம்பியிருந்தேன்.

இரண்டு நாட்கள் கழித்து 14.05.2009 நள்ளிரவு நான் எகிப்தை சென்றடைந்தேன். என்னோடு மருத்துவர் அருட்குமாரும் வந்திருந்தார். ஏற்கனவே முதல் நாள் நோர்வேயில் இருந்து அங்கு வந்து எனக்காகக் காத்திருந்த சொக்கன் அண்ணையோடு மறுநாள் காலை (15.05.2009) நாங்கள் போர்ட் சயீட் துறைமுகத்திற்கு புறப்பட்டோம். 

15.05.2009 மாலைக்குள் போர்ட் சயீட் துறைமுகத்திற்கு வணங்கா மண் கப்பல் வந்து விடும் என்பதால் எப்படியும் மதியத்திற்குள் அங்கு சென்று விட வேண்டும் என்பதற்காக நித்திரை கொள்ளாமல் முழித்திருந்து தொடருந்து வண்டி ஒன்றில் நாங்கள் ஏறிப் புறப்பட்டோம்.வன்னி செல்வதற்காக நான் எகிப்து செல்கின்றேன் என்பது குடும்பத்தில் இரண்டு பேரைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. நோர்வே செல்வதாக எனது அப்பா உட்பட அனைவரிடம் பொய் கூறிவிட்டுத் தான் புறப்பட்டேன்.போகும் போது இனி நாங்கள் திரும்பி வருவோமா, அப்படி வந்தாலும் கை, காலோடு வருவோமா என்று கூட எங்கள் மூன்று பேரில் எவருக்கும் தெரியாது.

ஆனாலும், நாங்கள் மூன்று பேரும் புறப்பட்டோம்.எங்களோடு வந்த மருத்துவர் அருட்குமார் தனது மனைவியையும், இரண்டு சிறு பிள்ளைகளையும் விட்டுத் தான் வந்தார். என்னோடு வரும் போது மருத்துவர் அருட்குமார் சொன்னார், ‘உந்தக் கப்பல் வன்னிக்குப் போகாது. சும்மா கடலில் நின்று போட்டு திரும்பி வர வேண்டியது தான்.’ஆனாலும் நானும் சொக்கன் அண்ணையும் அப்படி நினைக்கவில்லை.ஏனென்றால் முதலில் நெடியவனும், பின்னர் மணி அண்ணையும் எங்களிடம் அப்படிக் கூறவில்லை.எகிப்தில் இருந்து மூன்று வாரத்தில் நாங்கள் முள்ளிவாய்க்காலில் நிற்போம், பின்னர் சில வாரங்கள் கழித்து எங்களை சென்னையில் அல்லது சிங்கப்பூரில் எஸ்.ஓ அண்ணையின் பெடியள் இறக்கி விடுவாங்கள் என்று தான் முதலில் நெடியவனும், மணி அண்ணையும் கூறினார்கள்.வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், தமிழ் ஊடகவியலாளர்கள் யாரும் முள்ளிவாய்க்கால் செல்லப் பின்னடித்திருந்த நிலையில், அங்கு நடந்தேறிக் கொண்டிருந்த இனவழிப்பை வெளியுலகிற்கு கொண்டு வருவதற்காகத் தான் அக்காலகட்டத்தில் ஐ.பி.சியின் செய்தியாசிரியர் என்ற வகையில் ஒரு ஊடகவியலாளராக நான் அழைக்கப்பட்டிருந்தேன்.

15.05.2009 மதியம் நாங்கள் போர்ட் சயீட் துறைமுகத்தை சென்றடைந்து விட்டோம். ஆனால் வணங்கா மண் கப்பல் வந்து சேரவில்லை.மூன்று பேரும் பாதுகாப்புக் கருதி ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் (எமது சொந்தச் செலவில்) தங்கி அங்கு எமது பொதிகளை வைத்து விட்டு அருகில் உள்ள பீற்சா கடை ஒன்றுக்குப் போய் சாப்பிட்டோம்.அப்போதும் வணங்கா மண் கப்பல் வரவில்லை.வீதியால் நாங்கள் நடந்து கொண்டிருந்த பொழுது எனக்கு நெடியவன் தொலைபேசி எடுத்துச் சொன்னார், ‘அங்கை நிலைமை மோசமாகி விட்டுது. நீங்கள் கப்பலில் ஏற முதல் எனக்குச் சொல்லிப் போட்டு ஏறுங்கோ.’ எனது செல்பேசியில் இணையவலை இணைப்பு இல்லாததால், அவசரமாக விடுதிக்குப் போய், அங்கு காசு கட்டி, மடிக்கணினியில் இணையவலை இணைப்பை ஏற்படுத்தி வன்னிக்கு தொடர்பெடுத்தேன்.

மணி அண்ணை சொன்னார், ‘எல்லாம் முடியப் போகுது. நாளைக்கு எங்கடை தொடர்பு கிடைக்கவில்லை என்றால் நெடியவனோடை கதைச்சுப் போட்டு நீங்கள் லண்டனுக்குத் திரும்பிப் போங்கோ.’மறுநாள் 16.05.2009 காலை வணங்கா மண் கப்பல் வந்து சேர்ந்தது. ஆனால் போர்ட் சயீட் துறைமுகத்திற்கு அல்ல: ரெட் சீ துறைமுகத்திற்கு.நான், சொக்கன் அண்ணை, மருத்துவர் அருட்குமார் ஆகிய மூவரும் காலை உணவு அருந்தி விட்டு, காசு கட்டி இணையவலை இணைப்பை எமது மடிக்கணினியில் ஏற்படுத்தினோம். பின்னர் வன்னிக்கு அழைப்பு எடுக்க முயற்சித்தேன். ஸ்கைப் ஒன்றும் வேலை செய்யவில்லை.செய்திகளைப் பார்த்தேன். முள்ளிவாய்க்கால் கடற்கரையை சிறீலங்கா இராணுவம் கைப்பற்றி விட்டதாக செய்தி இருந்தது. இனி வன்னிக்குப் போவது சாத்தியமில்லை என்பது தெளிவாகியது.

சற்று நேரத்தில் நெடியவன் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார். ‘நீங்கள் என்ன செய்யப் போகிறீங்கள்? கப்பல் இனி வன்னிக்குப் போகாது. ஆனால் கப்பலில் ஏத்தின சாமான்களை சனத்துக்கு குடுக்க வேணும். அதாலை கப்பல் கொழும்புக்கு இல்லாட்டித் திருகோணமலைக்குத் தான் போகும். ஆனால் உங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியாது’ என்றார்.‘நான் வன்னிக்குப் போகத் தான் வந்தனான். திருகோணமலைக்கோ, கொழும்புக்கோ போய் ஆமியின்ரை ஜெயிலில் இருக்க விரும்பவில்லை. நான் இலண்டனுக்கே திரும்பிப் போறேன்’ என்றேன்.அதன் பின்னர் சொக்கன் அண்ணையோடு ஏதோ நெடியவன் கதைத்தார்.பிறகு நாங்கள் மூன்று பேரும் கூடி ஆராய்ந்தோம்.

ஆமியிட்டை மாட்டினாலும் பரவாயில்லை, தாங்கள்; கப்பலில் போகப் போவதாக சொக்கன் அண்ணையும், மருத்துவர் அருட்குமாரும் சொன்னார்கள். இரண்டு பேரையும் ரெட் சீ துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று கப்பலில் ஏற்றி விட்டு நான் கைரோ வந்தேன் (மூன்று நாட்கள் கழித்து இரண்டு பேரும் கப்பலில் இருந்து இறங்கி இலண்டனுக்கும், ஒஸ்லோவுக்கும் வந்தார்கள்).அங்கிருந்து மறுநாள் 17.05.2009 அன்று மதியம் விமானம் ஏறி அன்று மாலை இலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் நான் வந்திறங்கிய போது தான் அண்ணையின் வீரச்சாவுச் செய்தி என்னை வந்தடைந்தது.

16.05.2009 அன்று நள்ளிரவு 12:00 மணிக்கும், மறுநாள் 17.05.2009 அதிகாலை 3:00 மணிக்கும் இடைப்பட்ட மூன்று மணிநேர இடைவெளிக்குள் ஒரு சந்தர்ப்பத்தில் தான் அண்ணை வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்று எனக்குப் பின்னர் தகவல் வந்தது.அண்ணை வீரச்சாவைத் தழுவிய பொழுது அவரிடம் இருந்து நூறு மீற்றர் தூரத்தில் தான் எஸ்.ஓ அண்ணை நின்றார் என்றும் அறிந்திருந்தேன்.அவ்வளவு தான் எனக்குத் தெரியும்.

19.05.2009 அன்று காலை எனக்குத் தொலைபேசி மூலம் மட்டக்களப்பிலிருந்து தொடர்பு கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன், ‘ரஞ்சித், தலைவரின்ரை பொடியை ரி.வியில் காட்டுகிறாங்கள். பாருங்கோ. அது அவரே தான். அப்பிடியே அவரின்ரை கண் இருக்குது’ என்றார்.நான் அதிர்ச்சியடையவில்லை. ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்னர் எனக்குத் தெரிந்த தகவல் தான். ஆனாலும் அண்ணையின் வித்துடலை சிங்கள இராணுவம் கைப்பற்றும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.ரி.வி.யில் வந்து பார்த்தேன். சந்தேகமே இல்லை. 2003 மார்கழி மாதம் நான் சந்தித்த அதே அண்ணை தான். வன்னியில் என்னிடம் ரி.ரி.என் பிரச்சினை பற்றிக் கதைத்த அதே அண்ணை தான்.

உடனே நெடியவனுக்கு தொலைபேசி எடுத்தேன். ‘அது அவரின்ரை பொடி இல்லை. அது பொய்’ என்று நெடியவன் ஏதேதோ சொன்னார்.அடுத்து நெடுமாறன் ஐயாவின் மகள் பூங்குழலி அக்காவிற்கு தொலைபேசி எடுத்தேன். ‘அக்கா, அண்ணை வீரச்சாவடைந்து விட்டார். ஆளின்ரை பொடியை காட்டுகிறாங்கள்’ என்றேன்.‘இல்லை. இல்லை. அது அவர் இல்லை. அவர் இல்லை’ என்று பூங்குழலி அக்கா கத்தினார். இதற்கு மேல் கதைப்பதில் அர்த்தமில்லை என்று, ‘சரி அக்கா, வைக்கிறேன்’ என்று சொல்லி விட்டுத் தொலைபேசியைத் துண்டித்தேன்.உடனே அம்பாறையில் நின்ற நகுலனுக்கு தொடர்பு எடுத்தேன். பதில் இல்லை. நான் எகிப்து புறப்படும் முன்னர் என்னுடன் நகுலன் கதைத்திருந்தார்.

மறுநாள் மட்டக்களப்பில் இருந்த தயாமோகனுக்கு அழைப்பு எடுத்தேன்.‘ஓம், ரஞ்சித் அது அண்ணையின்ரை பொடி தான். இப்ப இயக்கத்துக்குப் பொறுப்பாக பத்மநாதன் அண்ணை (கே.பி.) தான் இருக்கிறார்’ என்றார்.ஒரு வாரம் கழித்து நகுலன் எனது அழைப்பிற்கு வந்தார்.‘ஐயோ, ரஞ்சித் நாங்கள் இனி இஞ்சை இருக்க ஏலாது. என்னோடை நின்ற பெண் பிள்ளை ஒன்றை இப்பத் தான் பஸ் ஏத்தி அனுப்பினனான். நான் யாழ்ப்பாணம் போக முயற்சிக்கிறேன். அங்கே போனால் தான் பாதுகாப்பு. நீங்கள் இப்போதைக்கு நெடியவின்டை தொடர்பில் இருங்கோ. கே.பியரின்ரை கதையளைக் கேட்காதையுங்கோ. தயாமோகன் சொல்லுறதையும் கேட்காதையுங்கோ’ என்றார்.

அண்ணையைப் பற்றிக் கேட்டேன். ‘ஓம் அண்ணை வீரச்சாவு தான், ஆனால் அதை அறிவிக்க வேண்டாம் எண்டு தயாமோகனுக்கு ராம் அண்ணை சொன்னவர். தயாமோகன் அவசரப்பட்டு பி.பி.சிக்கு பேட்டி குடுத்துப் போட்டார்’ என்றார்.இரண்டு வாரம் கழித்து என்னுடன் நெடியவன் தொடர்பு கொண்டு தூயமணி என்பவர் என்னை வந்து சந்திப்பார் என்றும், அவரோடு சேர்ந்து அரசியல் பணி புரியுமாறும் கோரினார்.அப்போது வழுதி என்ற பெயரில் பொபி அல்லது பரந்தாமன் என்பவர் தமிழ்ச்செல்வன் அண்ணையை விமர்சித்தும், கே.பியருக்கு ஆதரவாகவும் கட்டுரை எழுதி வந்தார். அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று என்னிடம் தூயமணி கேட்டார். நானும் அதன் படி பிரம்மசீடன் என்ற பெயரில் இரண்டு, மூன்று கட்டுரைகளை எழுதினேன்.

இத்தனைக்கு பொபி எனது நண்பர். பாலா அண்ணையை இரண்டு தடவைகள் பொபி சந்திக்க வந்த போதும், யேர்மனியில் நடந்த பட்டறை ஒன்றிலும் அவரை நான் சந்தித்திருந்தேன். எனது நண்பராக பொபி இருந்த போதும், கொள்கைக்கு மாறாக அவர் நடந்து கொண்டதற்காக பிரம்மசீடன் என்ற பெயரில் எழுதிய கட்டுரைகளில் பொபியின் கருத்துக்களையும், பொபியையும் விமர்சித்தேன். அவற்றை வாகீசன் பதிவு இணையத்தில் வெளியிட்டார்.திடீரென்று ஒரு நாள் நெடியவன், தான் ஒதுங்குவதாக தெரிவித்தார். தாங்கள் எல்லோரும் உறைநிலைக்குப் போவதாக தூயமணி கூறினார்.

பின்னர் ஒரு நாள் என்னுடன் தூயமணி தொடர்பு கொண்டு, ‘வாகீசன் அண்ணை உங்களைப் பதிவு இணையத்தளத்திற்கு எழுதச் சொன்னவர். எழுதுகிறியளோ?’ என்றார்.அன்று முதல் வாகீசன் கேட்டுக் கொண்ட படி சேரமான், அதியமான் ஆகிய புனைய பெயர்களில் செய்திகளையும், கட்டுரைகளையும் பதிவு இணையத்தில் எழுதினேன்.அந்த நாட்களில் ஜி.ரி.வி கே.பியருக்கு சார்பாக நின்று குழப்பமான செய்திகளை வெளியிட்டு மக்களைக் குழப்பிக் கொண்டிருந்தது.

அதைப் பற்றி எழுதித் தருமாறும், அதை ‘மற்ற வழியில்’ தான் வெளியிடப் போவதாகவும் என்னிடம் வாகீசன் கூறினார்.நான் எழுதிக் கொடுத்தவை ஓரிரு நாட்களில் ‘கறுப்பு’ என்ற மின்னிதழில் வெளிவந்தன.அதன் பின்னர் தான் ‘கறுப்பு’ மின்னிதழை நடத்துவது வாகீசன் என்பது எனக்குத் தெரிய வந்தது.2010 தை மாதம் 19ஆம் திகதி ஸ்கைப் மூலம் டென்மார்க் குட்டி அண்ணையும், வாகீசனும் என்னுடன் தொடர்பு கொண்டார்கள். ‘ரஞ்சித், ருத்ரகுமாரன் தொடங்க இருக்கிற நாடுகடந்த அரசாங்கத்தை எப்பிடியாவது உடைக்க வேணும். அவங்களாலை பெரிய சிக்கல் வரப் போகுது. ஏதாவது செய்ய ஏலுமோ?’ என்றார்கள் இரண்டு பேரும்.

உடனே, விசுவநாதன் ருத்ரகுமாரின் நாடுகடந்த அரசாங்கத்திற்கான திட்டத்தை அவர்களிடம் இருந்து பெற்று வாசித்துப் பார்த்தேன். பார்க்கப் பார்க்க எனக்குக் கடும் கோபம் வந்தது.உலகத்தை எமது பக்கம் வளைப்பதற்காக பெரும் பிரயத்தனம் செய்த பாலா அண்ணை, 2002 டிசம்பர் மாதம் ஒஸ்லோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சமஸ்டித் தீர்வை ஆராய்ந்து பார்க்க இணங்கினார். பாலா அண்ணையைப் பொறுத்த வரை சிறீலங்கா அரசாங்கம் ஒரு போதும் தமிழர்களுக்கு சமஸ்டி அல்ல எந்தத் தீர்வையும் தராது. ஆனால் சமஸ்டியை ஆராய நாம் இணங்கினால் எமக்குத் தீர்வு ஒன்றைத் தர வேண்டிய பொறிக்குள் சிறீலங்கா அரசாங்கம் சிக்கும். இறுதியில் எமக்கான தீர்வை சிறீலங்கா அரசாங்கம் தராமல் விடும் போது, எமது பக்கம் சர்வதேசத்தின் ஆதரவு முழுமையாகத் திரும்பும். ஒரு வேளை சமஸ்டித் தீர்வை சிறீலங்கா அரசாங்கம் தந்தாலும், அதில் பின்னாட்களில் பிரிந்து செல்லும் உரிமை, எமக்கான தனியான பாதுகாப்புப் படை போன்ற விடயங்கள் இருக்க வேண்டும் என்பதில் பாலா அண்ணை உறுதியாக இருந்தார்.

அண்ணையும் முதலில் பாலா அண்ணையின் ஆலோசனை ஏற்றுக் கொண்டார்.பின்னர் சில மாதங்கள் கழித்து அந்த நிலைப்பாட்டை அண்ணை மாற்றிக் கொண்டார். அதற்கு இரண்டு பேர் காரணம்.ஒருவர் சிவராம். இறந்தவரைப் பற்றி எழுதி அவரை நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. அவரால் உயிரோடு எழுந்து வந்து எனது குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்க முடியாது. எனவே சிவராமைப் பற்றி நான் மேற்கொண்டு எதுவும் எழுதாமல் விட்டு விடுகிறேன்.

அடுத்தவர் ருத்ரகுமாரன். ‘பாலா அண்ணை சமஸ்டியில்’ சறுக்கி விட்டார் என்று அண்ணையிடம் நீலிக் கண்ணீர் வடித்தார் ருத்ரகுமாரன். சமஸ்டித் தீர்வை ஆராய்ந்தால் தமிழீழத் தனிநாடு அமைப்பது ஐம்பது வருடங்களுக்குப் பின்னுக்குப் போய் விடும் என்றும், அதற்குப் பதிலாக இடைக்கால நிர்வாகத்தைக் கோரினால் பத்து ஆண்டுகளில் தமிழீழத்தை அமைக்கலாம் என்றும் அண்ணையிடம் ருத்ரகுமாரன் கூறினார்.வோசிங்டனில் நடக்க இருந்த உதவி வழங்கும் மாநாட்டிற்கு இயக்கம் அழைக்கப்படவில்லை என்ற ஆத்திரத்தில் இருந்த அண்ணையிடம், தென்சூடானிற்கு இடைக்கால நிர்வாகம் வழங்கப்பட்டதை மேற்கோள் காட்டி, அதே பாணியில் நாங்களும் இடைக்கால நிர்வாகம் கேட்க வேண்டும் என்று ருத்ரகுமாரன் ஆலோசனை வழங்கினார்.

பாலா அண்ணை மனம் ஒடிந்து போனார். அப்படி நாங்கள் செய்தால் இயக்கத்திற்கு அரசியல் தீர்வு நாட்டம் இல்லை என்று நினைத்து சர்வதேசம் இயக்கத்திற்கு எதிராகத் திரும்பும் என்று பாலா அண்ணை கவலைப்பட்டார். ருத்ராவின் ஆலோசனை தவறானது என்பதை சுட்டிக் காட்டினார். ஆனால் ருத்ரா, சிவராமின் ஆலோசனைகளையே அக்கணத்தில் அண்ணை ஏற்றுக் கொண்டார்.இதனால் எந்தப் பயனும் இயக்கத்திற்கு ஏற்படாது என்பது பாலா அண்ணைக்குத் தெரியும். கடைசியில் இயக்கம் அழிக்கப்படும் நிலைக்குத் தான் இது வழிகோலும் என்று பாலா அண்ணை அஞ்சினார்.அதையும் அண்ணைக்கு தெரிவித்தார்.

இடைக்கால நிர்வாக வரைபை தயாரிக்கும் பணிகளில் தான் ஈடுபட விரும்பவில்லை என்பதை அண்ணைக்குத்; தெரிவித்து விட்டு, சில மாதங்கள் பாலா அண்ணை ஓய்வு எடுத்துக் கொண்டார். தமிழ்நெற் ஜெயா, பரணி கிருஸ்ணரஜனி போன்ற வெங்காய ஆய்வாளர்கள் கூறுவது போல் பாலா அண்ணைக்கு இயக்கம் காற்றுக் கழற்றவில்லை. பாலா அண்ணையாகவே ஒதுங்கி சில மாதங்கள் ஓய்வெடுத்தார். இயக்கத்தை அழிக்கப் போகும் ஒரு திட்டத்தை பாலா அண்ணை தயாரிக்க விரும்பவில்லை.இயக்கம் இடைக்கால வரைபை தயாரிக்கத் தொடங்கியது. நிரந்தரத் தீர்வில் அக்கறை காட்டாமல் இடைக்காலத் தீர்வில் இயக்கம் அக்கறை காட்டியதால் இயக்கம் போரைத் தொடங்கத் தயாராகின்றது என்று சர்வதேசம் சந்தேகப்பட்டது. சிறீலங்கா இராணுவத்தை இந்தியா, அமெரிக்கா என முழு உலகமும் பலப்படுத்தியது.

கடைசியில் 2003 நவம்பர் முதல் வாரம் இடைக்கால வரைபை இயக்கம் கையளித்த போது அதை சிறீலங்கா அரசாங்கம் மட்டுமல்ல முழுச் சர்வதேசமுமே நிராகரித்தது.அந்தக் கணத்தில் தான் ருத்ரகுமாரனின் பலவீனத்தை அண்ணை கணித்தாரோ தெரியவில்லை.மீண்டும் துறவறத்தை முடித்துக் கொண்டு பாலா அண்ணை வந்து அண்ணைக்கு கை கொடுத்தார். ஆனாலும் காலம் கடந்திருந்தது.எல்லாமே பாலா அண்ணையை கையை மீறிப் போயிருந்தன.பாலா அண்ணை 14.12.2006 அன்று புற்றுநோயால் இறந்தார். அவர் இறந்து இரண்டரை ஆண்டுகளில் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டது.17.05.2009 அன்று அண்ணை வீரச்சாவைத் தழுவினார்.

பாலா அண்ணை சொன்னதை 2003 இல் இயக்கம் கேட்டிருந்தால் இயக்கம் தப்பியிருக்கும்.ருத்ரகுமாரன் சொன்னதைக் கேட்டதால் 2009 இல் இயக்கம் சுவடு இல்லாமல் அழிந்தது.அண்ணையும் வீரச்சாவைத் தழுவினார்.இயக்கம் அழிவதற்குக் காரணமாக இருந்த ருத்ரகுமாரனை, அண்ணையின் வீரச்சாவிற்குக் காரணமாக இருந்த ருத்ரகுமாரனை, மக்களைத் தன்னால் காப்பாற்ற முடியவில்லையே என்று கடைசி வரை கவலைப்பட்டு இறந்த பாலா அண்ணையை நோகடித்த ருத்ரகுமாரனை நான் எப்படி மன்னிக்க முடியும்?இப்போது தானே நாடுகடந்த தமிழீழ இராச்சியத்தின் மன்னன் என்று ருத்ரகுமாரன் பிரகடனம் செய்வதை நான் எப்படிப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்?உடனடியாகவே ருத்ரகுமாரனுக்கு எதிரான கருத்தியல் போரைத் தொடங்கினேன்.

டென்மார்க் குட்டி அண்ணையும், வாகீசனும் கேட்டுக் கொண்டபடி சேரமான் என்ற பெயரில் நான் எழுதிய கட்டுரை பதிவு இணையத்தளத்தில் வெளிவந்தது.மறுநாள் என்னோடு நந்தகோபன் ஸ்கைப் மூலம் தொடர்பு கொண்டு, ‘அம்மான் நீங்களா சேரமான்?’ என்று கேட்டார்.அவரோடு ஈழமுரசின் பொறுப்பாளர் ஆதித்தன் அண்ணையும் இணைப்பில் நின்றார்.அதன் பின்னர் பதிவில் மட்டுமல்லாமல், சங்கதி, ஈழமுரசு, தமிழ்க்கதிர் என மூன்று தளங்களில் சேரமானின் கட்டுரைகள் வெளிவரத் தொடங்கின.ஆடிப் போன ருத்ரகுமாரன், தமிழ்நெற் ஜெயா தான் சேரமான் என்று நினைத்து, தனது ஆட்கள் மூலம் தமிழ்நெற் ஜெயாவிற்கு எதிரான வசைபாடல்களைத் தொடங்கினார்.நான் சிரித்துக் கொண்டிருந்தேன்.

சில மாதங்களில் இயக்கத்திற்கு நிதி திரட்டிய குற்றத்திற்காக வாகீசன் யேர்மனியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அதன் பின்னர் பதிவு இணையத்தை நானும், சதீசும் (ஐ.பி.சி-ரி.ரி.என்.) சேர்ந்து நடத்தினோம்.ஒரு நாள் சதீசிடம் இருந்து பதிவு இணையத்தை நந்தகோபன் பறித்தெடுத்தார்.நானும் பேசாமல் பதிவில் எழுதுவதை நிறுத்தி விட்டேன்.ஆனாலும் சேரமான் என்ற பெயரில் நான் எழுதிய கட்டுரைகள் பதிவு, சங்கதி, ஈழமுரசு, தமிழ்க் கதிர் ஆகியவற்றில் வெளிவந்தன.ஒரு நாள் என்னிடம் ருத்ராவைப் பற்றி எழுதித் தருமாறு நந்தகோபன் கேட்டார்.மறுநாள் ‘கறுப்பு’ மின்னிதழில் அந்தப் பதிவு வெளிவந்தது.

அப்போது தான் எனக்குத் தெரியும், வாகீசன் சிறைக்குப் போன பின்னர் நந்தகோபன் ‘கறுப்பு’ மின்னிதழை நடத்துகின்றார் என்று.சரி, நல்ல விடயம் தானே என்று எனக்குத் தெரிந்தவர்களுக்கு ‘கறுப்பு’ மின்னிதழை அனுப்பினேன்.அவர்கள் எல்லோரும் நான் தான் ‘கறுப்பு’ நடத்துவதாக நினைத்தார்கள்.ஒருநாள் ஒரு பேப்பர் கோபி அண்ணை என்னிடம் கேட்டார், ‘நீங்களோ கறுப்பு நடத்துகிறது?’ என்று.பின்னர் ஒரு நாள் எமது முன்னாள் நிதிப்பொறுப்பாளர் தனம் அண்ணையைப் பற்றி கறுப்பில் எழுதப்பட்டது.‘ஏன் அண்ணை தனம் அண்ணையைப் பற்றி எழுதினீங்கள்?’ என்று நந்தகோபனிடம் கேட்டேன்.‘அவர் அம்மான் அங்காலை இஞ்சாலை ஆடிக் கொண்டு நிற்கிறார். ஆளை விடக்கூடாது’ என்றார்.

‘உங்களுக்கு தனம் அண்ணையைப் பற்றி ஆர் இதெல்லாம் சொன்னது?’ என்று கேட்டேன்.‘கமல் எங்களுக்கு தனம் அண்ணையைப் பற்றி முந்தி நிறைய எழுதி அனுப்பினவர். இப்ப அதை வைச்சுத் தான் தனம் அண்ணையை வெளுக்கிறேன்’ என்றார் நந்தகோபன்.ஆனால் எல்லோரும் நான் தான் கறுப்பு நடத்துவதாக நினைத்தார்கள்.தனம் அண்ணையும் அப்படித் தான் நினைத்தார்.இளநீர் குடித்தவன் யாரோ, ஆனால் கோம்பை சூப்பிப் பிடிபட்டவன் யாரோ என்கிற கதையாக எனது கதை அமைந்தது.பின்னர் ஒரு நாள் எனது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சலை நந்தகோபன் அனுப்பினார்.அதிர்ந்து போனேன்.

அது 2009ஆம் ஆண்டு நடேசன் அண்ணையை ஐ.பி.சியில் இருந்து பேட்டி காண்பதற்காக நான் அனுப்பிய மின்னஞ்சல். அந்த மின்னஞ்சல் நடேசன் அண்ணையின் மின்னஞ்சலில் இருந்து இரண்டு ஆண்டுகள் கழித்து எனக்கு வந்திருந்தது.மின்னஞ்சல் வந்த சில நிமிடங்களில் ஸ்கைப் மூலம் என்னுடன் நந்தகோபன் தொடர்பு கொண்டு, ‘என்ன நடேசன் அண்ணை உங்களுக்கு ஈமெய்ல் எல்லாம் அனுப்புறாராம்?’ என்றார்.நான் அதிர்ந்து போனேன்.பிறகு சிரித்து விட்டுச் சொன்னார், ‘அம்மான், நடேசன் அண்ணைக்கு நான் தான் ஈமெய்ல் திறந்து குடுத்தனான். அவருக்கு அனுப்பிற எல்லா ஈமெயிலும் நான் பார்க்கிறனான். நீங்கள் அவருக்கு அனுப்பின ஈமெய்ல்களும் என்னட்டை இருக்குது.’ 

பின்னர் நடேசன் அண்ணைக்கு ருத்ரகுமாரன் உட்பட பலர் அனுப்பிய மின்னஞ்சல்களை எனக்கும், ஆதித்தன் அண்ணைக்கும் அனுப்பி, ‘இதுகளை சேரமானின் கட்டுரையில் போடுங்கோ’ என்றார் நந்தகோபன்.அப்படியே செய்தோம்.ஆனால் நடேசன் அண்ணையின் மின்னஞ்சலை நான் உடைத்ததாக என் மீது வீண்பழி சுமத்தப்பட்டது.மீண்டும் கோம்பை சூப்பிப் பிடிபட்டவன் கதையாக நான்.இப்படியே சில மாதங்கள் கழிந்தன.ஒரு நாள் திடீரென்று எனக்கு அழைப்பு எடுத்த நந்தகோபன், ‘அம்மான் கறுப்புக்கு எதிராக அறிக்கை ஒன்று விடப் போகிறோம். எனக்கு ஒரே பிறெசராக இருக்குது. கறுப்பு சிறீலங்கா புலனாய்வுத்துறையின்ரை பத்திரிகை என்று தான் அறிக்கையில் வரும். ஆனால் நாங்கள் தொடர்ந்து கறுப்பில் போட்டு அடிப்போம்’ என்றார்.எனக்கு கெட்ட கோபம் வந்து விட்டது.

‘நாங்கள் என்ன சிறீலங்கா புலனாய்வுத்துறைக்கா வேலை செய்யிறம்? இப்பிடி நீங்கள் அறிக்கை விட ஏலாது அண்ணை’ என்றேன்.‘இல்லை அம்மான் குட்டியும், தனம் அண்ணையும் விடுகீனம் இல்லை. அதாலை நான் அந்த அறிக்கைக்கு இணங்கி இருக்கிறன். ஆனால் அறிக்கை வெளிவந்த உடனே குட்டி, தனம் அண்ணை எல்லாரையும் நான் போட்டுத் தாக்கி எழுதுவேன். நீங்கள் யோசிக்க வேண்டாம்’ என்றார்.நான் அதை ஏற்கவில்லை. அன்று மாலை கறுப்பிற்கு எதிராக இல்லாத இயக்கத்தின் பெயரில் அறிக்கை வெளிவந்தது. 

நந்தகோபன் நேர்மையுடன் நடக்கவில்லை என்பதை ஆதித்தன் அண்ணைக்கு நான் சுட்டிக் காட்டினேன் (தனது மனைவி, பிள்ளைகளும், தானும் மலேசியாவில் இருந்து லண்டன் வருவதற்கு வெளிநாட்டுக் கிளைகளிடம் பணம் பெறுவதற்காகவே இப்படி நந்தகோபன் நடந்து கொண்டார் என்பது எனக்குப் பின்னர் தெரிய வந்தது). உடனடியாக சங்கதி, பதிவு, தமிழ்க்கதிரில் நந்தகோபனுக்கு இருந்த அக்செசை (பதிவேற்றும் உரிமையை) நாங்கள் முடக்கினோம்.மறுநாள் அதிகாலை 4:00 மணியளவில் தனக்கு இருந்த அக்செசைப் பயன்படுத்தி அந்த அறிக்கையை நந்தகோபன் கேட்டுக் கொண்டபடி கமல் அண்ணை வெளியிட்டார்.

காலை 6:00 மணியளவில் அதை நாங்கள் அகற்றினோம். அப்படியே கமலுக்கு பதிவில் இருந்த அகசெசையும் முடக்கினோம்.அதன் பின்னர் கறுப்பு இதழை வெளியிடுவதை நந்தகோபனும் நிறுத்தினார். அத்தோடு கறுப்பு காணாமல் போனது.கறுப்பில் நான் எழுதிக் கொடுத்தது ருத்ரகுமாரன் மற்றும் கே.பி ஆகியோரைப் பற்றிய பதிவுகளை மட்டும் தான். மற்றையவை எல்லாம் நந்தகோபனின் அல்லது அவரோடு இரகசிய தொடர்பில் நின்ற ஏனையவர்களின் கைவண்ணங்கள். எனக்கு அவற்றுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை.இதன் பின்னர் ஈழமுரசும், சங்கதியும் என்று சேரமானின் பெயரிலான எனது கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன.

2013ஆம் ஆண்டு நந்தகோபன் மலேசியாவில் இருந்து ஈரான் வரும் வழியில் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு நாடுகடத்தப்பட்டார்.இலண்டன் வரும் ஆசையில் கொள்கையைக் காற்றில் பறக்க விட்ட நந்தகோபன் எல்லோரையும் காட்டிக் கொடுத்தார்.அதன் பின்னர் சிறீலங்கா அரசாங்கத்தின் தடைப்பட்டியில் நான் சேர்க்கப்பட்டேன்.2014ஆம் ஆண்டு நான் கலாநிதி பட்டம் பெற்ற பின்னர், சேரமான் என்ற பெயருக்கு முன்னால் கலாநிதி என்ற எனது பட்டத்தை இணைப்பதற்கு ஈழமுரசு முடிவு செய்தது.அது வரை யார் சேரமான் என்று குழம்பிக் கொண்டிருந்த பலருக்கு அதன் பின்னர் தான் சேரமான் நான் என்ற உண்மை தெரிய வந்தது.

2014ஆம் ஆண்டின் இறுதியில் ஆதித்தன் அண்ணை மீது பிரான்சில் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியை அடுத்து, ஈழமுரசு நின்று போக என்னுடன் டென்மார்க்கில் இருந்து தொடர்பு கொண்ட எனது நண்பர் சிவா, ‘மச்சி, நீ என்ன எழுதாமல் விட்டு விட்டாய்?’ என்றார். பின்பு அவர் கேட்ட படி சில ஆக்கங்களை எழுதிக் கொடுத்தேன்.சில வாரங்கள் கழித்து கனடாவில் உலகத் தமிழர் பத்திரிகையை நடத்தும் கமல் என்பவர் என்னுடன் தொடர்பு கொண்டு தமது பத்திரிகைக்கு கட்டுரை எழுதித் தருமாறு கேட்டார்.எனது கட்டுரைகள் சில மாதங்கள் அப்பத்திரிகையில் வெளிவந்தன. ஒரு நாள் கனடா சென்ற எனது நண்பர், பத்திரிகையைக் கொண்டு வந்து என்னிடம் போது அதிர்ந்து போனேன்.

நான் எழுதிக் கொடுத்தவற்றை வெட்டி விட்டு, தமக்குப் பிடித்தவற்றை மட்டும் உலகத் தமிழர் பத்திரிகையில் வெளியிட்டிருந்தார்கள். அதன் பின்னர் கனடா உலகத் தமிழர் பத்திரிகைக்கு எழுதுவதை நான் நிறுத்தினேன்.சில வாரங்கள் கழித்து பிரான்சில் ஆதித்தன் அண்ணை மீதான கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான முரளி என்பவர் கைது செய்யப்பட்டு அவருக்கு நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டது.அதன் பின்னர் மீண்டும் ஈழமுரசு வெளிவர சேரமானின் பத்திகள் மீண்டும் பழைய மிடுக்கோடு வெளிவந்தன.இதற்கிடையில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்து தனம் அண்ணை தூக்கி எறியப்பட்டார். கமல் அண்ணையை நீக்குவதற்கு கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இதனை என்னிடம் கமல் அண்ணை கூறியதோடு, இதில் சிவந்தன் என்பவரும், மருத்துவர் அருட்குமாரும் தான் முன்னிற்பதாக தெரிவித்தார். அதனால் சிவந்தனோடும், மருத்துவர் அருட்குமாரோடும் எனக்கு முரண்பாடுகள் ஏற்பட்டன. பின்னர் சிவந்தனுடனான முரண்பாடுகள் ஆதித்தன் அண்ணை, வாகீசன் ஆகியோரின் தலையீட்டால் சரிசெய்யப்பட்டன.ஆனாலும் இது நீண்ட காலம் நீடிக்கவில்லை.ஸ்கந்தா என்பவரின் வீட்டு பார்பக்கியூ சாம்பலை பாலா அண்ணையின் அஸ்தி என்று கூறி ஒக்ஸ்போர்ட் மாட்டுப்பண்ணை சங்கீதனும், சுபனும் மக்களை ஏமாற்றிப் பணம் சேகரிக்க முற்பட்ட போது பாலா அண்ணையின் அஸ்தி என்ற ஒன்றே இல்லை என்று அன்ரி அறிக்கை வெளியிட்டார்.

அதனை விழுந்தடித்து கமல் அண்ணை தனக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்பினார்.சங்கதி, பதிவு என எல்லா இணையத்தளங்களிலும் அந்த அறிக்கை வெளிவந்தது.சிவந்தன் மட்டும் அதனைத் தனது முகநூலில் பகிர மறுத்தார்.அதனால் சிவந்தனோடு கதைப்பதை நான் நிறுத்தினேன்.சிவந்தனுக்கு மாட்டுப்பண்ணைக்காரரோடு ஏதோ இரகசிய தொடர்பு இருப்பதாக நான் சந்தேகப்பட்டேன்.சிவந்தன் பதிவு வாகீசனின் விசுவாசியும் கூட. அன்ரியின் அறிக்கையை பதிவு வெளியிட்டது: ஆனால் சிவந்தன் பகிரவில்லை. இதனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.இதற்கிடையில், ஆதித்தன் அண்ணையோடு நெருங்கிய உறவில் இருந்த வாகீசன் திடீரென்று ஆதித்தன் அண்ணையை மிக மோசமாகத் தாக்கி விழிப்பு என்ற மின்னிதழை வெளியிடத் தொடங்கினார்.

முன்னர் கறுப்பு மின்னிதழை நடத்திய பதிவு வாகீசன், யேர்மனியில் சிறை சென்று, பின்னர் மருத்துவர் ஒருவரை மணம் முடித்து இலண்டன் வந்த பின்னர் திடீரென ஆதித்தன் அண்ணைக்கு எதிராக மாறினார்.இதற்கிடையில் ஐ.பி.சி தொலைக்காட்சியில் சிறீலங்கா இராணுவத்திற்கு ஆதரவான நிகழ்ச்சி ஒன்று 2016ஆம் ஆண்டு ஒலிபரப்பாகியது. அதை விமர்சித்து எழுதுமாறு என்னிடம் ஆதித்தன் அண்ணை கேட்டார். நானும் இணங்கி எழுதிக் கொடுத்தேன். இத்தனைக்கு ஐ.பி.சியின் பணிப்பாளரான நிராஜ் டேவிட் என்னோடு நல்ல உறவில் இருந்தவர். கொள்கைக்காக அவரையும் விமர்சித்தேன். 

2018ஆம் ஆண்டு நான் எனது நண்பர் சிவாவை சந்திப்பதற்காக டென்மார்க் சென்ற போது அங்கு என்னை குட்டி அண்ணை, மகேஸ் அண்ணை, சசி அண்ணை, பிரியன் அண்ணை என எல்லோரும் சந்தித்தார்கள். அப்போது டென்மார்க்கில் என்னிடம் தெரிவிக்கப்பட்ட தகவல்களில் முக்கியமானது அச்சுதன் என்பவர் கம்போடியாவில் இயக்கத்தின் விமானங்கள் இருப்பதாகக் கூறி பெரும் தொகையான இயக்கப் பணத்தைப் பெற்று ஏப்பம் விட்டு விட்டார் என்பது தான்.

அதைப் பற்றி ஈழமுரசில் நான் எழுத முற்பட்ட போது அதற்கு ஆதித்தன் அண்ணை உடன்படவில்லை. காரணம் அச்சுதன் தனது மனைவியின் உறவினர் என்பதாலும், அதனால் தனது குடும்பத்தில் பிரச்சினை வரும் என்பதாலும். 2021 தை மாதம் ஈழமுரசு பத்திரிகை சஞ்சிகையாக மாறியது.அதில் இனிமேல் யாரையும் விமர்சித்து எழுதுவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது.அதில் சேரமான் என்ற பெயரில் எனது கட்டுரைகளை வெளியிடுவதை ஆதித்தன் அண்ணை தவிர்க்க விரும்பினார்.எனது சொந்தப் பெயரில் எழுதுமாறு கேட்டார்.இதற்கிடையில் என்னுடன் டென்மார்க்கில் இருந்தும், நோர்வேயில் இருந்து தொடர்பு கொண்ட இரண்டு பேர், ‘என்ன நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறியள்? சேரமான் ஒன்றும் எழுதாமல் இருக்கிறதாலை இவங்கள் எழும்பி ஆடுகிறாங்கள்’ என்றார்கள்.

நான் ஈழமுரசின் நிலைப்பாட்டை விளக்கினேன். அவர்களோ விடுவதாக இல்லை.கடைசியில் சேரமானின் பெயரில் நான் ஒரு கட்டுரையை எழுதினேன். அதை சங்கதியில் வெளியிட ஆதித்தன் அண்ணை அனுமதித்தார்.ஆனால் அதனை நீக்குமாறு சுவிசில் இருந்து அப்துல்லா என்பவர் ஆதித்தன் அண்ணைக்கு அழுத்தம் கொடுத்தார். ‘உங்களுக்குப் பிரச்சினையாக இருக்குது என்றால் எடுத்து விடுங்கோ’ என்றேன். உடனேயே அதனை ஆதித்தன் அண்ணை நீக்கி விட்டார்.அதன் பின்னர் இலண்டனில் அம்பி அக்காவின் உண்ணாவிரதத்தை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும், ஒக்ஸ்போர்ட் மாட்டுப் பண்ணையும் ஒன்றாக நடத்தி மக்களின் எழுச்சியை மழுங்கடித்தார்கள்.

இது நியூட்டன் செய்த வேலை என்று கமல் அண்ணை என்னிடம் கூறினார்.அதன் பின்னர் சேரமானின் ஆவி உருவாகியது.மீண்டும் கமல் அண்ணையை தூக்கும் முயற்சியில் நியூட்டன் இறங்கினார்.நான் உடனே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் ஆனந்தன் அண்ணைக்கு தொடர்பெடுத்துச் சொன்னேன், ‘பாலா அண்ணையை கொச்சைப்படுத்தின மாட்டுப்பண்ணையோடு ரி.ரி.சியை இணைக்கிறதில் தீவிரமாக நிற்கும் நியூட்டனுக்காக நீங்களை கமல் அண்ணையை தூக்கினால் அதுக்கான விளைவுகளை ஊடகங்களில் நீங்கள் சந்திக்க வேண்டி வரும்.’அதன் பின்னர் கமல் அண்ணையைத் தூக்கும் முயற்சி கைவிடப்பட்டது.

இதற்கிடையில் மாட்டுப்பண்ணையோடும், ருத்ரகுமாரனோடும் குட்டி அண்ணை சேர்ந்திருப்பதாக எனக்குத் தகவல் வந்தது.எந்த ருத்ரகுமாரனுக்கு எதிராக 11 ஆண்டுகளுக்கு முன்னர் என்னைக் குட்டி அண்ணை எழுதச் சொன்னாரோ, இப்போது அவரோடு குட்டி அண்ணை கைகோர்த்திருந்தார்.குட்டி அண்ணையின் பின்னணியில் இயக்கத்தின் பணத்தைத் திருடிய அச்சுதன் இருப்பதாகவும், அச்சுதனை கடவுள் போன்று எனது நண்பர் டென்மார்க் சிவாவும், சிவந்தனும் தூக்கிப் பிடிப்பதாகவும் தகவல் வந்தது.அது மட்டுமல்லாமல் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவையும், மாட்டுப் பண்ணையையும் ஒன்றிணைப்பதில் பதிவு வாகீசனின் மைத்துனரான செல்வகுமார் என்பவரே முன்னிற்பதாகவும், சிவந்தன், அச்சுதன், குட்டி அண்ணை என எல்லோருமே ஒரு அணியில் நிற்பதும் தெரிய வந்தது.

கடந்த 10.10.2021 இலண்டனில் கமல் அண்ணையும், நியூட்டனும் ஒன்று சேர்ந்து சூமில் கூட்டம் ஒன்றை நடத்தினார்கள்.வரும் 1ஆம் திகதி ஸ்கொட்லாண்ட் வரும் கோத்தபாயவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் பற்றிய கூட்டம் அது.பொதுவாக அரசியல் விடயங்கள் பற்றி என்னுடன் கதைத்து ஆலோசனை பெறும் கமல் அண்ணையோ அல்லது தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் இலண்டன் பொறுப்பாளர் ஆனந்தனோ அந்தக் கூட்டம் பற்றி என்னிடம் மூச்சுக் கூட விடவில்லை.அதில் மாட்டுப்பண்ணை நிரூபனிடம் கமல் அண்ணை நிதி உதவி கோரினார்.அதை ஈழம் ரஞ்சன் என்னிடம் தொடர்பு கொண்டு கூறிய போது நான் முதலில் நம்பவில்லை.

உடனே கமல் அண்ணைக்கு தொடர்பு எடுத்தேன். அவர் எனது அழைப்பை ஏற்காமல் நழுவினார்.அன்று இரவு மீண்டும் கதைத்த போது தான் அப்படிச் செய்யவில்லை என்று மறுத்தார்.அப்போது நான் கூறினேன், ‘நீங்கள் மாட்டுப்பண்ணையோடு சேர்ந்தியள் என்றால், நீங்கள் பாலா அண்ணைக்குத் துரோகம் செய்யிறியள்.’‘இல்லை நான் ஒரு நாளும் பாலா அண்ணைக்குத் துரோகம் செய்ய மாட்டேன்’ என்றார் கமல் அண்ணை.மாட்டுப்பண்ணைக்காரரிடம் கமல் அண்ணை நிதி உதவி கேட்டதற்கான முழு ஆதாரங்களையும் இன்று எனக்கு ஈழம் ரஞ்சன் அனுப்பி வைத்தார்.இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?

கடைசியாக டென்மார்க்கில் இருக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் ஒருவரிடம் தொடர்பு கொண்டு கேட்டேன்.‘உங்களுக்கு மேலை ஆர் அண்ணை உங்களை இயக்கீனம்?’அதற்கு அவர் கூறிய பதில் எனக்கு அதிர்ச்சியை அளித்தது.ஒருவர் டென்மார்க் மகேஸ் அண்ணை. மற்றவர் நெதர்லாந்து ரங்கன் அண்ணை. மூன்றாவது நபர் 2007ஆம் ஆண்டு வெளிநாட்டுக்கு வந்த தினேஸ் என்ற முன்னாள் போராளி. நான்காவது நபரான சந்தோசம் என்பவர் சிறீலங்கா இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வெளிநாடு வந்தவர். ஐந்தாவது நபரின் பெயர் அன்புமாறன். அவரும் சந்தோசம் மாதிரி சிறீலங்கா இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வெளிநாடு வந்தவர்.

‘இவையளுக்கு மேலை ஆர் இருக்கீனம்?’ என்று அவரிடம் கேட்டேன்.‘ஒருத்தரும் இல்லை’ என்றார்.இது தான் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமைப்பீடம்.அதற்குப் போட்டியாக இந்தியாவில் வசிக்கும் சிறீ என்பவரின் தலைமையில் இன்னொரு குழு இயங்குகின்றது.இவர்களை விட சுவிசில் தயாமோகன் தலைமையில் இன்னொரு குழு.பிறகு பிரான்சில் அச்சுதன் குழு, நாயகன் குழு, இந்தியாவில் சிரஞ்சீவி குழு, பிரிட்டனில் சங்கீதன் குழு.எல்லோரும் அண்ணை இருக்கிறார் என்று கூறிக் கொண்டு மக்களிடம் பணம் பறிப்பதில் மட்டும் தான் குறியாக இருக்கின்றார்களே தவிர, தாயக மக்களின் உரிமைகளுக்காக ஆக்கபூர்வமான எந்தப் பணிகளையும் செய்வதற்கு இவர்கள் யாரும் தயாராக இல்லை.

2009ஆம் ஆண்டு என்னிடம் கதைக்கும் போது வாகீசன் கூறினார், ‘நான் ராம் அண்ணையிட்டை கெஞ்சினான். அண்ணை இல்லை என்று அறிவிக்காதையுங்கோ. அப்பிடிச் செய்தால் சனம் எங்களுக்கு காசு தராது.’ஆக எல்லோருக்கும் தேவை மக்களின் பணம். இது தான் கடந்த 12 ஆண்டுகளாக எமது போராட்டம் செத்துக் கிடப்பதற்குக் காரணம்.இந்தப் பணத்தைப் பெறுவதற்காகத் தான் போட்டி போட்டு மாவீரர் நாள் நடத்துகிறார்கள்.இந்தப் பணத்தைப் பெறுவதற்காகத் தான் கடந்த 12 ஆண்டுகளில் யாரும் அண்ணைக்கு வீரவணக்கம் செலுத்துவதில்லை.கடந்த 12 ஆண்டுகளில் கொள்கை மாறியவர்களையும், தடம்புரண்டவர்களையும், துரோகம் செய்தவர்களையும் மட்டுமே கண்டிருக்கிறேன்.‘இப்ப எல்லாக் கள்ளரும் ஒன்று சேருகிறாங்கள். என்ன செய்யலாம் அண்ணை?’ என்று இன்று ஆதித்தன் அண்ணையிடம் கேட்டேன்.

‘நாங்கள் ஒரு கோடு போட்டு வேலை செய்தம். நீங்கள் அந்த கோட்டில் இருந்து வெளியில் போய் சேரமானின் ஆவியைத் தொடங்கினியள். நாங்கள் சரி என்று பார்த்துக் கொண்டிருந்தோம். இப்ப நீங்களே பெரிய கோட்டைக் கீறிப் போட்டியள். அண்டைக்கு கல்வி மேம்பாட்டுப் பேரவை ரீச்சரிட்டை இருக்கிற ஒன்றரை இலட்சம் பவுண்ஸ் பற்றி நீங்கள் எழுதினது எனக்கு சரியான கோபம்’ என்றார் ஆதித்தன் அண்ணை.ஒன்று மட்டும் புரிந்தது: சேரமான் பேசாமல் இருக்கும் நேரம் வந்து விட்டது என்பது தான்.முதலில் தயாமோகன் வழிதவறினார்.பின்பு நகுலன் எதிரியிடம் மண்டியிட்டார்.அடுத்து நெடியவன் விலகினார்.

பின்பு நந்தகோபன் பணத்துக்காக சோரம் போனார்.பின்னர் வாகீசன் தடம் மாறினார்.அடுத்து குட்டி அண்ணை தடம் புரண்டார்.இப்போது கமல் அண்ணை மாட்டுப்பண்ணையிடம் நிதி கேட்கிறார்.ஆதித்தன் அண்ணை ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறார்.இனி சேரமானுக்கு என்ன வேலை?இப்போது தான் புரிகின்றது, ஏன் யாரையும் நம்பி வன்னியை விட்டுத் தப்பி வர அண்ணை முயற்சிக்கவில்லை என்று.பாலா அண்ணை உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் ஏதோ விதத்தில் அண்ணையைக் காப்பாற்றி இருப்பார்.தனது நம்பிக்கைக்குரிய பாலா அண்ணை வெளிநாட்டில் உயிரோடு இல்லாத நிலையில், ருத்ரகுமாரனையும், வெளிநாடுகளில் கடந்த 12 ஆண்டுகளில் நான் கண்டவர்களையும் நம்பி அண்ணை வன்னியை விட்டு வெளியில் வந்திருந்தால் அண்ணையை இவர்கள் எல்லோருமே நட்டாற்றில் கைவிட்டிருப்பார்கள் என்பது மட்டும் உறுதி.

அதனால் தான் அண்ணை கடைசி வரை வன்னியில் நின்று வீரச்சாவைத் தழுவினார்.இனி சேரமானின் கட்டுரைகள், பிலாவடிமூலைப் பெருமானின் நையாண்டிகள், அம்மானின் கடிதங்கள், சேரமானின் ஆவியின் பதிவுகள், பிசாசின் பதிவுகள் என்று என்னால் கடந்த காலங்களில் எழுதப்பட்ட எவையும் இனி வெளிவர மாட்டாது.நீங்கள் எவரும் நினைத்தபடி எதையும் செய்யலாம்.மக்களை ஏமாற்றிப் பணம் சுருட்டலாம்.உங்களுக்குத் தடையாக சேரமான் இருக்க மாட்டேன்.எனது வாசகர்களுக்கு மட்டும் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். வெளிநாடுகளில் இயக்கத்தின் பெயரில் செயற்படுபவர்களையும் சரி, அரசியல் செய்வதாக கூறுபவர்களையும் மட்டும் நம்பி விடாதீர்கள். இவர்களுக்குப் பணத்தைத் தவிர வேறு எந்த குறிக்கோளும் கிடையாது.

இது கடந்த 12 ஆண்டுகளில் நான் பட்டறிந்த அனுபவம்.இங்கு எனக்கு இரண்டு கவலைகள் தான்.ஒன்று இவர்களைப் புரிந்து கொள்ள எனக்கு 12 ஆண்டுகள் எடுத்துள்ளது.இரண்டாவது 2009 மே 18 அன்று யுத்தம் முடிந்த பின்னர் நோயாளியாக, வாய் பேச முடியாமல் பாரிசதவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக தாயகத்தில் இருந்த எனது அம்மாவுடன் கதைக்கவும் முடியவில்லை, அவரைப் போய்ப் பார்க்கவும் முடியவுமில்லை, கடைசியில் 30.09.2011 அன்று அவர் இறந்த போது அவரின் மரணச் சடங்கில் கூட என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.பரவாயில்லை: எமது மக்களின் விடிவிற்காக தமது தாய்மாரைக் கடைசி வரை பார்க்காத எத்தனையோ மாவீரர்களின் தியாகத்தோடு ஒப்பிடும் போது நான் சந்தித்த இழப்பு சிறியது தான்.

உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

அன்புடன்,

சேரமான்அல்லது, பிரம்மசீடன், அதியமான், இளஞ்சேட்சென்னி, சேயோன், மாயவள், பிலாவடிமூலைப் பெருமான், அம்மானின் கடிதங்கள்,

சேரமானின் ஆவி, சேரமானின் பிசாசு , ஆகிய பெயர்களில் எழுதிய நான்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *