லெப். கேணல் ஜீவன்

லெப். கேணல் ஜீவன்

ஜீவனுள்ள நினைவுகள்…

“மட்டக்களப்பு – அம்மாறை மாவட்ட துணைத் தளபதி” தளபதி லெப். கேணல் ஜீவன்.

கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கைபோட்டிருக்கும் முட்செடிகள். கொழும்பு ரோட் (மட்டு – கொழும்பு நெடுஞ்சாலை ) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலங்குகள் சலசலக்காது இறுக்கிப்பிடிக்கப்படுகின்றன. ஆபத்தை தவிர்க்கும் அளவிற்கு அவசியமான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து பின் செல்வதே ஒரு கலை.

தென்ஈழக் காடுகளிலே இந்தக் கலைதான் அவசியமான அரிச்சுவடி. கத்திவெட்டுப் போல் ஒரு நகர்வு…

இப்படி புத்தியையும் பலத்தையும் எடைபோட்டு நடந்ததாலேயே அங்கு போராட்டம் தாக்குப்பிடித்தது, தளிர்கொண்டது. கத்தியையும் புத்தியையும் இடம் மாறிவைத்தவர்களைக் காலம் மட்டுமல்ல காடுகூட கைகழுவி விடும்.

கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கொழும்பு ரோட்டிற்குக் குறுக்காக நடந்த பெரும்பாலான நகர்வுகளை ஜீவன்தான் வழிநடத்தியிருக்கிறான். தவழ்ந்து திரிந்து வேவு பார்த்ததும், தாக்குதல் செய்து தலை நிமிர்ந்ததும். தவறு செய்து தண்டனை பெற்றதும். உயிரைப் பணயம் வைத்து உறுதியை நிலை நாட்டியதும் எல்லாமே இந்தக் கொழும்பு ரோட்டில் தான். அதன் இருமருங்கிலும் நிற்கும் மரங்கள் வயல்வரம்புகள், மின்கோபுரங்கள், மண்மேடுகள் என்று எல்லாமே ஜீவனின் மனதுள் அடக்கம்.

அணியின் நகர்வு தடைப்படுகின்றது. பாதை தவறியது தெரியவருகிறது. பெரியதொரு காவு அணியையும் அதற்கேற்ற சண்டை அணியையும் கொண்ட அந்த நீண்ட மனிதக்கோடு மீண்டும் நகர ஆரம்பித்தது. இப்போது அதன் முதல் ஆளாக ஜீவன் நடந்துகொண்டிருக்கிறான்.

“நாங்கள் சுமந்து திரியும் ரவைகளில் எந்தெந்த ரவை எந்தெந்தச் சிப்பாயின் உடலுக்குரியதோ தெரியவில்லை. இதேபோல எனக்குரிய ரவையையும் ஒரு சிப்பாய் இப்போது சுமந்து திரிவான். அது எப்போது புறப்படும் என்பது எவருக்கும் தெரியாது”

சண்டைகளின் முன்னான நகைச்சுவைப் பொழுதுகளில் சிரித்தபடி ஜீவன் சொல்வது வழக்கம். அன்று, கொழும்பு ரோட்டில் மையிருளிலே ஈழயுத்தத்தின் இன்னுமொரு அத்தியாயம் முடிய இருந்த சூழ்நிலையில், பதுங்கிக் கிடந்த சிப்பாய் ஒருவனின் ஆரம்ப ரவையாக அது புறப்படும் என்பதையும் எவரும் அறிந்திருக்கவில்லை.

இது ஜீவனின் வழமையான பாணி என்பதால் ஒரு தளபதியை முதல் ஆளாகவிட்டு பின்னே செல்லும்போது உண்டாகும் சங்கடம் பலருக்கு ஏற்படுவதில்லை. ஆபத்தை நாடிச்செல்லும் ஜீவனின் இயல்பிற்கு சிங்கபுர சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.

சிங்கபுர விடுதிப்பகுதி சிப்பாய்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்து வந்திருக்கிறது. ஒரே இடத்தில் பல தடவை பதுங்கித் தாக்குதல் செய்யப்பட்டதே அதன் காரணம். அதிலே இரண்டாவது தாக்குதல் 1992ம் ஆண்டு இடம்பெற்றது. அதிலே ஜீவன் களத்தளபதி.

இதற்கு முன்பு நிகழ்ந்த தாக்குதலிலே கொல்லப்பட்ட எதிரிகளின் நினைவாக அமைக்கப்பட்ட சிறிய நினைவுத் தூபியை நிலையெடுத்த இடத்தில் இருந்தே பார்க்கக்கூடியதாக இருந்தது. எதிரி அதிலே காப்பு நிலையெடுத்து எம்மைத் தாக்கினாலே தவிர, அதைச்சேதப்படுத்த வேண்டாம் என்று இறுதி முதற் தொகுப்புரையில் எமக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தாக்குதல் ஆரம்பித்தது.

எதிரியின் கவச வண்டியை நோக்கி RPG கணையொன்று சீறிச்சென்று வெடிக்க எங்கும் புகைமயம். பவல் உடைந்து விட்டதா? என்ற கூச்சலும் இயந்திர உறுமலும் வேட்டொலியுமாக சிறு குழப்பம் நிலவினாலும் ஆங்காங்கே தென்பட்ட எதிரிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

புகை விலகியபோது பவலின் மிகச் சமீபத்தில் ஜீவன் T55 -2 உடன் நிற்பதையும் அவனின் தலையின் மேலாக 50 கலிபரால் சிவப்பாகத் தும்மியபடி பவல் பின்வாங்கி ஓடுவதையும் காணக்கூடியதாக இருந்தது. எந்தச் சமரின் போதும் இறுக்கமான பகுதிக்கே ஜீவன் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்தப்பகுதியிலும் மிக இறுக்கமான இடம் நோக்கியே ஜீவன் ஈர்க்கப்பட்டதற்கு அவனது போரார்வமும் மாசற்ற வீரமுமே காரணம். எங்கும் செல்வோம் என்று எம் படைகள் எழுந்து நடந்ததும் எதிலும் வெல்வோம் என்று சூழ்கொட்டி நிமிர்ந்ததும் ஜீவன்களாலேயே அன்றி வேறு வழிகளில் அல்ல.

ஜீவனின் வாழ்க்கைத் தடத்தில் பயத்திற்கு மட்டுமல்லாது பகட்டிற்கும் இடமிருக்கவில்லை. தலைமைத்துவப் பாடநெறியொன்றில் எல்லோரையும் விட அதிக புள்ளிகளை ஜீவன் பெற்ற போது, ஆர்ப்பாட்டம் இன்றி தனிமையிலிருந்து கற்றதையும் தலைவரின் பேச்சடங்கிய ஒலிநாடாக்களை பரபரப்பின்றிக் கேட்டு வந்ததையும் அறியாத சிலர் மூக்கிலே விரல் வைத்தார்கள். நடையுடைபாவனைகளில்கூட ஜீவன் எளிமையானவன். போராளிகளுடன் சேர்ந்து பங்கர் வெட்டிக்கொண்டிருந்த ஜீவன் சற்றுக்களையாற, சராசரிப் போராளியின் உடையில் தனது தளபதி இருப்பார் என்பதைச் சற்றும் எதிர்பாராத ஒரு புதிய போராளி தொடர்ந்து வேலை செய்யும்படி ஜீவனை ஏவியதும் அடுத்த தேனீர் இடைவெளி வரை ஜீவன் மௌனமாக பங்கர் வெட்டியதும் மங்கிப்போக முடியாத மனப்பதிவுகள்.

வன்னியிலே நிகழ்ந்த பல மறிப்புச்சமர்களிலே இறுக்கமானவை எனக் கருதப்பட்ட இடங்களிலும் “ஓயாத அலைகள் 2” நடவடிக்கையிலும் முக்கிய பங்குகளை வகித்து, பின் மட்டு – அம்பாறை மாவட்டத்தின் இணைத் தளபதியாக பொறுப்பேற்ற பின் ஏறத்தாழ பதினைற்தாண்டு கால வெடிப்புகையையும் சமர்ப்புழுதியையும் சுவாசித்ததால் முப்பதாவது வயதில் முதற்தடவையாக ஈழைநோயால் பாதிக்கப்பட்டபின் நிகழ்கிறது இச்சம்பவம். இந்த எளிமை கலந்த அர்ப்பண உழைப்புக்களாலேயே பெருவெற்றிகள் சாத்தியமாகின என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

1987இன் ஆரம்பத்தில் இணைந்து கொண்ட ஜீவன் 90 இன் பிற்பகுதியிலே ஒரு தனிச்சண்டை அணியின் தலைமையாளனாக வளர்ந்திருந்தான். தானே வேவு பார்த்து, திட்டமிட்டு, களத்தில் வழிநடத்துவதையே அவன் எப்போதும் விரும்பினான். வெற்றியும் அவனையே விரும்பியது.

எதிரியின் மீது தாக்குதல், ஆயுதம் அபகரிப்பு என்ற செய்தி கிடைக்கும் போதெல்லாம் அத்தாக்குதல்களின் தன்மைகளை ஒப்பிட்டு இது ஜீவனுடைய பாணியில் அல்லவா அமைந்திருக்கின்றன என்று பேசுகின்ற அளவிற்கு சிறுதாக்குதல்களில் தனிமுத்திரை பதித்திருந்தான் ஜீவன். இது எந்த வீரனுக்கும் இலகுவில் கிடைத்துவிடாத மிகவுயர்ந்த பேறு.

மூன்றாம் ஈழயுத்த ஆரம்பத்திற்கும் 1997இன் ஆரம்பத்திற்கும் இடையேயான காலத்தில் ஜீவன் வாகரைப் பிரதேச கட்டளை அதிகாரியாக இருந்த போதே பலசிறு தாக்குதல்களின் மூலம் கிடைக்கக்கூடிய பெரிய அனுகூலங்கள் அவனால் நிரூபிக்கப்பட்டன. கதிரவெளி வரை பரவியிருந்த எதிரி முகாம்கள் ஐந்து, காயான்கேணிப் பகுதியையும் கடந்து பின்வாங்கப்பட்டன. மக்களின் கல்வி பண்பாட்டு முறைகள் சீர்பெற்றன. மருத்துவமனை அடங்கலான எமது முகாம்கள் பல குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டன. வாகரைப் பிரதான வீதியோரமாக (திருமலை வீதி) மாவீரர் துயிலுமில்லம் நிறுவப்பட்டது.

அங்கே நிகழ்ந்த போர்ச்சாதனை பற்றி அக்காலத்தில் மாவட்ட அறிக்கைப்பிரிவின் மேலாளராகவிருந்த மேஜர் லோகசுந்தரம் (வீரச்சாவு 05.03.1999) மாவடி முன்மாரிப் பகுதியில் விசேட அதிரடிப்படையுடனான மோதலில்) அவர்கள் கூறியது: “அந்த அறிக்கைகளை ஒப்பிடுவது ஒரு புதிய அனுபவம். 20 மாத காலத்தினுள் வாகரைப் பிரதேச விசாலகன் படையணி சந்திவெளி, சித்தாண்டிப் பகுதிகளிலே நிகழ்ந்த நான்கு பெரும் தாக்குதல்களிலும், மாவடி முன்மாரிப் பிரதேசத்தில் நிகழ்ந்த நடுத்தர அளவிலான சில தாக்குதல்களிலும் கலந்து கொண்டது போக தமது பகுதியில் மட்டும் தனியாகச் செய்த நடுத்தர மற்றும் சிறிய தாக்குதல்களில் 340 ற்கும் மேற்பட்ட படைக்கலன்களை கைப்பற்றியிருக்கிறது. இப்படியொரு விடயத்தை இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை.”

சாதனைகள் பொதிந்த ஜீவனின் போரியல் வாழ்வில் சோதனைகளுக்கும் குறைவில்லை. குடும்பிமலைப் பகுதியில் கொமாண்டோக்களுக்கு எதிரான தாக்குதலிலும், பூநகரித் தவளைச் சமரிலும் பின்பு கூமாச்சோலை முகாம் தாக்குதலிலும் உடலின் எடையில் ஈயமும் பங்கேற்கும் அளவிற்கு செம்மையாகக் காயப்பட்டிருந்தான்.

“ஜீவன் உண்ட குப்பியையும் தகட்டையும் வாங்கிப்போட்டு தண்டித்து சமைக்க விடும்படி சிறப்புத் தளபதி சொல்லியிருக்கிறார்”

இதே கொழும்பு ரோட்டிலேயே, போராளிகளின் சுமை கருதி, தவிர்க்க வேண்டிய பாதையொன்றினூடாக வழிநடத்தியதால் ஏற்பட்ட இழப்பிற்கான தண்டனை அறிவித்தலை தனது உணர்வுகளைச் சிரமப்பட்டு அடக்கியபடி இன்னுமொரு தயபதி ஜீவனிடம் கூறியபோது மிக அமைதியாகப் பதில் வந்தது “சரி நிறைவேற்றுங்கள்”

அதைத் தொடர்ந்து ஒரு ஆரம்பப் போராளியைப்போல புளுகுணாவை முகாம் தகர்ப்பிற்கான தடையுடைப்புப் பயிற்சி பெறுகிறான் ஜீவன். தொட்டாற்சுருங்கி முட்கள் முழங்காலிலும் முழங்கையிலும் புண்களை ஏற்படுத்துகின்றன.

தன்னைத் தோள்பிடித்து தூக்கி நிறுத்திய தளபதி, அரவணைத்து ஆறுதல் தந்த தோழன். முன்நடந்து வீரம்காட்டி விழுப்புண் சுமந்த பெருமகன் – மண் தோய்ந்த காயத்துடன் பயிற்சி பெறுவதைக் காண பயிற்சிப் பொறுப்பாளரின் மனம் விம்முகின்றது.

“ஜீவண்ணன்…… நீங்கள் எழுந்துபோய் சற்று ஓய்வு எடுக்கலாம்”

புலிக்குறோலில் போய்க்கொண்டிருந்த ஜீவனிடமிருந்து நிமிர்ந்து பார்க்காமலே பதில் வருகிறது.

“எல்லோருக்கும் பொதுவான விதிகளே எனக்கும் பொருந்தும்”

இறுக்கமான முகத்துடன் தொடர்ந்து நகரும் ஜீவனைப் பார்க்க பயிற்சிப் பொறுப்பாசிரியனின் உதடுகள் துடித்து விழிகள் பொங்க குரல் தளம்பாமல் சமாளித்தபடி கூறுகிறான்.

“பயிற்சிப்புண் அதிகமாகி விட்ட போராளிகளுக்கு நாங்கள் பயிற்சி தருவதில்லை. இங்கு நானே பொறுப்பாளன். இது என்னுடைய உத்தரவு நீங்கள் எழும்பலாம்”

இதுவரை தங்கள் உணர்வுகளை மரக்கவைத்து ஜீவனுடன் நகர்ந்து கொண்டிருந்த அத்தனை போராளிகளும் நன்றிப் பெருக்கோடும் நிம்மதிப் பெருமூச்சோடும் பயிற்சிப் பொறுப்பாசிரியனை நிமிர்ந்து பார்க்கின்றார்கள் ஒவ்வொரு சோடிக் கண்களிலும் ஒவ்வொரு சோடிக் கண்ணீர் துளிகள்.

ஜீவனுடைய எளிமையையும் அர்ப்பணிப்பையும் போலவே குறும்புகளையும் குறைவான பக்கங்களையும்கூட தலைவர் அறிந்திருந்தார். இருப்பினும் கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பது போல, பலம் பலத்திற்கு மரியாதை செய்யும் என்பதைப் போல வீரம் வீரத்தால் ஈர்க்கப்படுவதும் தவிர்க்க முடியாதது என்பதை ஜீவனின் சாவிற்குப் பின்னான தலைவரின் உணர்வு வெளிப்பாடுகள் திரைவிலக்கித் தெரியவைத்தன – தெளியவைத்தன. சராசரிக்கும் மேலான ஜீவனின் போரியல் பண்புகளை தலைவர் அவதானித்தே வைத்திருக்கிறார் என்பதைப் புரிய வைத்தன.

ரோட்டிலே ஜீவன் கம்பீரமாகக் கால்பாவிநிற்க நிழல்போலக் கடந்து செல்கிறார்கள் போராளிகள். அந்த இருட்டிலும் ஆட்களை அடையாளம் கண்டு காதோடு பாரம் விசாரித்து, தூரம் சொல்லி, தோள்தட்டி துரிதப்படுத்தி நிற்கிறான் ஜீவன். ஆபத்தை நோக்கி முதல் ஆளாகச் சென்று அதன் நடுவில் நின்று நம்பிக்கை தருவதும் கடைசி ஆளாகவே அவ்விடத்தை விட்டு அகலுவதும் போராளிகள் ஜீவன் மேல் பற்றுவைத்ததற்கான பிரதான காரணங்கள். வீரமுள்ள எவராலும் ஜீவனை வெறுக்க முடியாது.

ஜீவனின் நினைவுகளை மீட்டும்போது, தனக்குக் கீழுள்ள படைத்தலைவர்களின் உணவுத்தட்டுக்களைக்கூட கழுவிவைத்து ஒழுக்கம் பழக்கும் எளிமையோ, அல்லது முன் செல்லும் போது முதல்வனாகவும் பின் வலிக்கும்போது இறுதி ஆளாகவும் வரும் தலைமைத்துவமா, எது மேலோங்கி நிற்கிறது என்று அலசினால் அவையிரண்டையும் விட அவனின் களவீரமே எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்து கிடக்கிறது. பிறந்தபோது குடிசையில் பிறந்த ஜீவன் இறந்தபோது ஈழத்தின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்ததற்கும் அவனது ஏழ்மையற்ற கம்பீரமனமே காரணம்.

பிறப்பினால் எவருக்கும் பெருமை வருவதாக நாம் நம்புவதில்லை. ஜீவன் தன் நட்பினால் தாய் மண்ணின் தலையைப் பலமுறை நிமிரவைத்திருக்கிறான். அவன் இழப்பினால் தாய் மண்ணே சோகம் ததும்பும் பெருமையுடன் ஒரு கணம் தலைகுனிந்து நின்றது.

ஜீவனின் இரத்தம் தோய்ந்த கொழும்புச் சாலையில் இருக்கும் எதிரிச் சுவடுகள் என்றோ ஒரு நாள் துடைத்தழிக்கப்படும். அந்த உன்னத சுதந்திர திருநாளின் போது தாயகப் பெருஞ்சாலைகள் கருத்தாரிட்டு செவ்வனே மெழுகப்படும். ஆனால் ஜீவனின் உணர்வு சுமந்து நிற்கும் ஒவ்வொரு தோழனுக்கும் என்றுமே அது ஒரு செஞ்சாலை.

நினைவுப்பகிர்வு: இராசமைந்தன்
நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (தை, மாசி 2005)

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *