ரஜினிகாந்த் பின்வாங்கியதற்கான உண்மையான காரணம் என்ன?

ரஜினிகாந்த் பின்வாங்கியதற்கான உண்மையான காரணம் என்ன?

எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சியொன்றை ஆரம்பிக்கவிருந்த நடிகர் ரஜினிகாந்த் தன எண்ணத்தைத் திடீரென ஒத்திப்போட்டதற்கு அவரது உடல்நிலை மட்டும் காரணமில்லை எனத் தற்போது வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

‘அண்ணாத்தே’ படப்படிப்பின்போது திடீரெனச் சுகவீனமுற்றார் எனக்கூறி ரஜினி மருதுவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது இரத்த அழுத்தம் நிலையற்றதாக இருந்தமையே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது. அதில் உண்மையிருந்தாலும், சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்குட்பட்டவர்களுக்கு இவ்வறிகுறி ஆச்சரியப்படும் ஒரு விடயமல்லவெனவும், இப்படியான பிரச்சினைகளை அறிந்திருந்தும் ரஜினி தனது கட்சி ஆரம்பத்திற்கான நாளாக டிசம்பர் 31 ம் திகதியை நிர்ணயித்திருந்தார் என்பதையும் அவரது திடீர் அறிவிப்பின் மீதான சந்தேகத்தை எழுப்புபவர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே அவரது பின்வாங்கலுக்கான முடிவுக்கு வேறு காரணங்கள் இருக்கிறதென அவர்கள் வலுவாக நம்புகிறார்கள்.

டிசம்பர் மாதம் தனது ரசிகர்களையும், ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களையும் சந்தித்தபோது அவர் கேட்டுக்கொண்ட ஒரு விடயம் அரசியலில் இறங்குவதாக இருந்தால் கட்டாயம் வெற்றி பெற வேண்டும், அது தோல்வியில் முடியக்கூடாது என்பது. படத்தில் என்றாலும் நிஜவாழ்வில் என்றாலும் அவரால் தோல்வியைச் சகித்துக்கொள்ள முடியாது என்கிறார் அந்த ஊடகவியலாளர்.

அது மட்டுமல்லாது, அரசியலில் ஈடுபடுபவர்கள் பல அவச்சொற்களைக் கேட்கவேண்டி வரும். கருணாநிதி, ஜயலலிதா போன்றவர்கள் அவற்றை இலகுவாக உதாசீனம் செய்துகொண்டு போய்விடுபவர்கள். ரஜினிகாந்தினால் அப்படியானவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் அவர்.

ரஜினிகாந்தின் இயல்பை நன்கறிந்த இந்த ஊடகவியலாளரின் கருத்துப்படி, ரஜினி எப்போதுமே முடிவெடுப்பதில் தயக்கம் காட்டுபவர். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் கடந்த 25 வருடங்களாக அவரிடம் இருந்து வருகிறது, ஆனால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை.

அது மட்டுமல்லாது ரஜினியின் கட்சியைக் கட்டியெழுப்பக்கூடிய வளங்கள் அவரிடம் மிக அரிதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டின் தற்போதுள்ள சூழ்நிலையில் அவரிடம் இருக்கும் வளங்களை மட்டும் வைத்துக்கொண்டு வெற்றியை ஈட்டிக்கொள்ள முடியாது என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

‘தராசு’ ஷியாமின் கருத்துப்படி, ரஜினியின் இறுதி முடிவுக்கு பா.ஜ.க. வுடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து முரண்பாடு எனவே காரணம் என அறியப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிக ஆசனங்களைத் தக்கவைத்துக்கொள்ள பா.ஜ.க. ரஜினியையும், அ.தி.மு.க. வையும் ஏக காலத்தில் பாவித்து பேரம் பேசுவதில் ஈடுபட்டிருந்தது எனவும் இவ் விடயத்தில் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் இறுக்கமாக இருந்தாரெனவும் அதனால் கட்சியை விரைவில் ஆரம்பிக்கும்படி ரஜினி மீது பா.ஜ.க. அதிக அழுத்தத்தைப் பிரயோகித்தது எனவும் அதன் காரணமாகவே, ரஜினி ரசிகர்கள், ஆதரவாளர்களே அதிர்ச்சியடையும் வகையில், கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்ற அறிவித்தலைச் சமீபத்தில் அவர் செய்திருந்தார் எனவும் பரவலாகப் பேசப்படுகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *