இலங்கைத் தமிழ் மீனவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும்!

இலங்கைத் தமிழ் மீனவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும்!

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த வாரம் 54 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இரண்டு தினங்களில் படகுகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.குறித்த மீனவர்களின் விடுதலைக்காக இந்திய தூதரகம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த மீனவர்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுத்தமை பாராட்டத்தக்கது.

ஆனால் இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் பிடிபட்டு இந்திய சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.பெரும்பான்மை இன மீனவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை விடுதலை செய்வதற்காக இலங்கை அரசாங்கமும், இந்தியாவில் இருக்கின்ற இலங்கை தூதரகமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அவர்களை விடுதலை செய்கின்றனர்.

ஆனால் தமிழர்கள் எல்லை தாண்டி பிடிபடும் பட்சத்தில் அவர்களையும், அவர்களின் மீன் பிடி உடமைகளையும் இன்று வரை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்கள் எல்லை தாண்டி பிடிபடும் பட்சத்தில் அவர்களை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.இலங்கை அரசாங்கம் தமிழர்களின் விடயம் என்ற வகையில் அசமந்த போக்கை கடைப்பிடிக்க கூடாது.

அவர்களும் மீனவ சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் விடுதலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.தமிழர்கள் என்ற காரணத்தினால் அவர்கள் தொடர்ந்தும் சிறையில் வாட அனுமதிக்கக் கூடாது. எனவே தமிழராக உள்ள மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.இந்தியாவில் இருக்கின்ற இலங்கை தூதரகமும் இலங்கை அரசாங்கமும் தமிழ் மீனவர்களை விடுதலை செய்வதற்கான ஒரு முயற்சியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

எங்கு பார்த்தாலும் இன ரீதியான ஒடுக்கு முறையை இலங்கை அரசாங்கம் செய்து வருகின்றது. குறிப்பாக எல்லை தாண்டி போகின்ற எமது மீனவர்கள் இன்றைக்கும் சிறைகளில் வாடிக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் வேண்டும் என்று எல்லை தாண்டிச் செல்வதில்லை.எனவே அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகளை யாரும் செய்யவில்லை. நாங்களும், அமைப்புக்களும் மீனவர்களை விடுதலை செய்ய குரல் கொடுக்கின்றோம்.

ஆனால் அரசாங்கம் இவ்விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை. எனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது மீனவர்கள் மீது கவனம் செலுத்தி அவர்களை விடுதலை செய்து நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இந்தியாவில் முகாம் மற்றும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது தமிழ் மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் மற்றும் மீன் பிடித்துறை அமைச்சர் ஆகியோர் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என அவர் தெரிவித்தார்.

தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாஸவினால் கடந்த நல்லாட்சி அரசில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தினால் பல்வேறு குடும்பங்கள் பலன் அடைந்தார்கள்.ஆனால் வீட்டுத்திட்டத்தை பெற்ற பல குடும்பங்கள் இன்று கடன் காரராக உள்ளனர். சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடுகளுக்கு சுமார் 1 இலட்சம் ரூபாய் முதல் 2 இலட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.மக்கள் புதிய வீடுதகளை அமைப்பதற்காக தமது பழைய வீடுகளை அகற்றி வீடுகளை கட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

தமது உடமைகளை அடகு வைத்தும், வங்கிகளில் கடனைப் பெற்றும் அதி கூடிய வட்டிக்கு பணத்தை பெற்றும் வீடுகளை கட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டே குறித்த வீட்டுத்திட்டம் அரசினால் வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது குறித்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கும் இடர்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

தற்போதைய அரசு கூட பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுத்திட்ட பிரச்சினையை நிவர்த்தி செய்ய அக்கறை காட்டவில்லை.தற்போதைய எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கடந்த அரசாங்கத்தில் வீட்டுத் திட்டம் வழங்கியதன் காரணத்தினாலேயே தற்போதைய அரசாங்கம் அக்கறை காட்டவில்லை என தெரிகின்றது.தற்போது எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறித்த வீட்டுத்திட்டம் தொடர்பில் வாய் திறக்க கஸ்டப்படுகின்றார்.

பல்வேறு விடயங்களை அவர் நாடாளுமன்றத்தில் கதைத்தாலும் கூட வீட்டுத்திட்ட பிரச்சினையில் அவர் வாய் மூடி மௌனம் காக்கின்றார். இவ்விடயத்திற்கு அவரும் குரல் கொடுக்க வேண்டும்.மன்னார் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்தை பெற்று கொடுப்பனவுகள் கிடைக்காத மக்களை ஒன்றிணைத்து மன்னாரில் முதல் கட்டமாக நாளை செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளோம்.

அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வீட்டுத்திட்டத்திற்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க கோரி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.வீட்டுத்திட்டத்தை பெற்று நிதி உரிய முறையில் கிடைக்காதவர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டும்.அதனைத் தொடர்ந்து வவுனியாவிலும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *